tamilnadu

img

9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்- உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு  மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு மதியம் 2 மணிக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விசாரணையின் போது, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. அதாவது, தொகுதி மறுவரையறை செய்யவில்லை என நினைத்தால் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தெரிவித்தது. இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் எங்களால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியும் என்று கூறினர். உள்ளாட்சித் தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது, ஆனால் நிறுத்தி வைக்க முடியும். தேர்தல் விதிகள் முறையாக பின்பற்ற முடியவில்லை என்றால், எங்களால் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதே சமயம், ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையையே ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வார்டு வரைமுறை முடியும் வரை 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து இன்று மதியம் 2 மணிக்குள் பதிலளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தலை நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. இதைத்தொடர்ந்து திமுக உள்ளிட்ட 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிரத்து தேர்தலை நடத்தலாம். 
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, நெல்லை,தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் சட்டத்திற்குட்பட்டு வார்டு மறுவரையறை பணிகளை முடித்து 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து புதிய அறிவிப்பாணையை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.