புதுதில்லி:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களை, யாரும் பார்க்காத வகையில், நான்கு சுவர்களுக்குள் வைத்து அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை ஆகாது என்ற தொனியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இருப்பதுடன், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பாதுகாப்பையும் தீர்ப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ் வர்மா. இவரும் இவரது குடும்பத்தினரும் தலித் பெண் ஒருவரின் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட தலித் பெண், ஹிதேஷ் சர்மாவின் வீட்டிற்கே சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது, ஹிதேஷ் வர்மா நிலத்தைத் தரமுடியாது என்று மறுத்ததுடன், சாதியைச்சொல்லி திட்டியும், மிக மோசமான முறையில் தலித் பெண்ணை அவமானப்படுத்தியுள்ளனர்.2019 டிசம்பர் 10-ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தலித் பெண் 2019 டிசம்பர் 11 அன்று புகார் அளித்துள்ளார். போலீசாரும் அந்தப் புகாரை ஏற்றுக்கொண்டு, ஹிதேஷ் வர்மா மீது ஐபிசி மற்றும் எஸ்சி-எஸ்டி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இந்த வழக்கை எதிர்த்து, ஹிதேஷ் வர்மா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, தனது தீர்ப்பை அளித்துள்ளது.அதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களை, பொதுமக்கள் பார்க்கும் வகையில், பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தினால் மட்டுமே, அது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். மாறாக, சாட்சிகள் இல்லாத வீட்டின் நான்கு சுவர்களுக்குள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு இழைக்கப்படும் அவமதிப்புகளை, பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் பிரிவு 3 (1) (R) இன் கீழ் வன்கொடுமை வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
“ஒரு வீட்டிற்கு வெளியே ஒரு புல்வெளியைப் போன்ற இடத்தில், அல்லது கட்டடத்திற்கு வெளியே ஒரு குற்றம் நடந்தால், சாலையிலிருந்து அல்லது எல்லைச் சுவருக்கு வெளியே உள்ள பாதையில் இருந்து யாராவது பார்க்க முடியும் என்றால், அது நிச்சயமாக ஒரு பொது இடமாக இருக்கும்.ஆனால், குற்றச்சாட்டின்படி, சம்பவம் கட்டடத்தின் நான்கு சுவர்களுக்குள் வீட்டில் நடந்த ஒன்றாகும். அந்த நேரத்தில் பொதுமக்களில் எந்தவொரு உறுப்பினரும் இருந்ததாக எப்ஐஆரில் கூறப்படவில்லை. மேலும், சிவில் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள சொத்துக்களை வைத்திருப்பது தொடர்பானதாக இருதரப்புக்குமான பிரச்சனை உள்ளது. இதில், எழும் எந்தவொரு சர்ச்சையும் எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழான ஒரு குற்றத்திற்குள் வராது. ஒரு நபருக்கான அனைத்து அவமானங்களும் அச்சுறுத்தல்களும் எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக ஆகாது” என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வழக்கில் ஹிதேஷ் வர்மா மீதான குற்றப்பத்திரிகை மற்றும் சம்மன்களையும் அவர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.இந்த தீர்ப்புதான் தற்போது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. தங்களின் தீர்ப்புமூலம், ஒரு குற்றத்தை யாருக்கும் தெரியாமல் செய்தால், அது குற்றமாகாது என்று நீதிபதிகள் கூற விழைகின்றனரா? இது இயற்கை நீதிக்கே எதிரானதாக இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.