tamilnadu

img

கிராமசபைக் கூட்டத்தை நடத்தக்கோரி முறையீடு.... மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்... உயர்நீதிமன்றம் அறிவிப்பு

மதுரை:
தமிழகத்தில் கிராமசபை கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இதுகுறித்து மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதால்,  கொரோனா பரவலை காரணம்காட்டி தமிழக அரசு   கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த அருண் அய்யனார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைநீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு கிராமசபை நடத்தக்கோரி முறையீட்டை முன்வைத்தார்.

அதில், இந்தாண்டு நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, மே1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 உள்ளிட்ட நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது கட்டாயம். இந்த கூட்டங்களிலேயே கிராம வளர்ச்சி சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்தத் தீர்மானங்களை அரசுகளே மீறுவது கடினம். அது போல வலுவான, மதிப்புமிக்க கிராம சபைக்கூட்டத்தை கொரோனா பரவலையும், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கமாட்டார்கள் எனக்கூறி ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே,கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும். இதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.