மணிப்பூர் பாலியல் வன்முறையை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சத்தியமங்கலம் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் நடைபெற்று வரும் மனித நேயமற்ற, வக்கிரமான வன்முறைகளைத் தடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசுகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சத்தியமங்கலம் வட்டக்கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மணிப்பூர் கலவரத்திற்கு காரணமானவர்களைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ராக்கிமுத்து தலைமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டக்கிளை செயலாளர் என்.முத்துச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக வட்டக்கிளை பொருளாளர் ஆர்.முத்து நன்றி கூறினார்.