tamilnadu

வாக்குச்சீட்டுகளை வழங்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் - ஆட்சியர்

ஈரோடு, ஏப். 5-

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு,ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல், காரப்பாறை பகுதியில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை வெள்ளியன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தப்பட்ட பல்வேறு பணிகளை ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறோம். அதில் 100 சதவிகிதம் வாக்களிக்குமாறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பி வைத்தல் மற்றும் அலுவலர்களை நியமித்தல், அஞ்சல் வாக்கு சீட்டுகளை அனுப்பி வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகளை வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏப்.12ஆம் தேதிக்குள் (வெள்ளியன்று) முடிக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கையொப்பத்துடன் வாக்காளர் அல்லது அவரது குடும்பத்திலுள்ள 18 வயது பூர்த்தியான உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். எனவே வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து புகைப்பட வாக்காளர் சீட்டினை பெற்றுக் கொண்டு தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று தவறாமல் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட கலந்து கொண்டனர்.

;