இராஜபாளையம்:
‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகளால்தான் இந்த உலகம் இன்றும் பிழைத்துக் கிடக்கிறது என்று இராஜபாளையத்தில் நடைபெற்ற விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கூறினார்.
இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவுவிழா, நவம்பர் 8 ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் எழுதிய “கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்க காலம் - விருதுநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விதைகள், வேர்கள், விழுதுகள்” என்ற நூல் வெளியீடும், மூத்த தலைவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவில், கட்சியின் மூத்த தலைவரும், மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.ஏ.பெருமாள் நூலை வெளியிட மூத்த தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
எம்.என்.எஸ்.வெங்கட்டராமன்
விழாவில் கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் கூறுகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, இயக்கத்திற்காக பங்களிப்பு செய்தவர்களின் மகத்தான பணிகளையும் வாழ்வையும் தொகுத்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் உள்ளிட்ட ஆளுமை களைப் பற்றிய செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. கட்சியின் மத்தியக்குழு கட்சியின் வரலாற்றை தொகுக்க முடிவு செய்து1920-1933 வரையுள்ள வரலாற்றை தொகுத்துள்ளது. இது மிகப்பெரிய பணியாகும். அதற்கு பிந்தைய வரலாற்றையும் தொகுக்க வேண்டியுள்ளது. இது ஒரு கடினமான பணியாகும். நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளின் மகத்தான தியாகங்கள் பற்றி அவ்வளவு விபரங்கள் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் மிகப் பெரிய போராட்ட வரலாற்றைக் கொண்டதாகும். வத்திராயிருப்பு பகுதியில் நடைபெற்ற சுத்தவாரப் போராட்டம், சேத்தூர் பகுதியில் ஜமீனை எதிர்த்த போராட்டம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதியில் தொழிலாளர்கள் போராட்டம் என எண்ணற்ற போராட்டங்கள் நடந்துள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்துத் தான் ‘விதைகள், வேர்கள், விழுதுகள்’ புத்தகம் வெளிவந்துள்ளது. நாம் வரலாற்று ஆவணங்களை முழுமைப்படுத்த வேண்டும்.விடுதலைப் போராட்ட காலத்தில் சிறை சென்றவர்கள், அங்கு நடந்த விவாதங்கள் மூலம் கம்யூனிஸ்ட்டுகளாக மாறி செயல்பட தொடங்கினர். ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்க இவர்கள் உதவியாக இருந்தனர். பல்வேறு சதி வழக்குகள் தொகுக்கப்பட்டன. பலர் 1முதல் 8 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வர்க்க போராட்டம் என்பது நிலபிரபுத்துவத்திற்கு எதிரான குத்தகை விவசாயிகள் போராட்டம், விவசாய தொழிலாளர்கள் போராட்டம், தொழிலாளி வர்க்க போராட்டம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.சேத்தூரில் ஜமீன் ஆதிக்கத்தை எதிர்த்துதோழர் எஸ்.பி.செல்லப்பிள்ளை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் உரிமைகளுக்காக அய்யணன், பூரான் போன்றவர்களும், சிவகாசியில் தொழிலாளர்களை திரட்டி தோழர்கள் ஜே.லாசர், பி.பால்ராஜா, திருவில்லிபுத்தூரில் வேலுச்சாமி போன்றவர்களும் போராடினர். இதன் காரணமாக பல கம்யூனிஸ்ட் கிராமங்கள் உருவாகின.
குறிப்பாக வத்திராயிருப்பு, மகாராஜபுரம், சேத்தூர், தேவதானம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மேட்டுப்பட்டி, எட்டக்காபட்டி மலைப்பட்டி, சாத்தூர் அருகே உள்ள சிறுக்குளம் போன்ற கிராமங்களில் தலைமறைவு காலங்களில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தங்கி பணியாற்றியுள்ளனர்.1964க்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிலை நிறுத்துவதில், இதை மக்கள் இயக்கமாக மாற்றியதில் பல தலைவர்களின் பங்கு உள்ளது. ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உருவான போது சிறிய இயக்கமாகும். விருதுநகர் மாவட்டத்தில் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் தலையீடு செய்து, தலைமை தாங்கி வெற்றி பெறும் வரை பல்வேறு போராட்டங்கள் நடத்திய காரணத்தால் பெரிய இயக்கமாக வளர முடிந்தது.இவ்வாறு அவர் பேசினார்.
மதுக்கூர் ராமலிங்கம்
விழாவை நிறைவு செய்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசியதாவது:செங்கொடி இயக்கம் அடுத்த தலைமுறையிடம் பாதுகாப்பாக உள்ளது என்பதை இந்த நூற்றாண்டு விழா உணர்த்தும் வகையில் உள்ளது. இது வேர்களுக்கு விழுதுகள் வீர வணக்கம் செலுத்தும் நாளாகும். நாம் அவர்களுக்கு துண்டு போடுவதல்ல கவுரவம்; அவர்களது தொண்டினை முன்னெடுத்துச் செல்வது தான் முக்கிய கடமையாகும். எப்படி விருதுநகர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் தீப்பெட்டிகள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறதோ அதைப்போல், விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற தோழர்கள், தீப்பந்தம் போல் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று கட்சிப் பணியாற்றி வருகிறார்கள்.நூற்றாண்டு வரலாற்றை எழுதுகிறோம். அதில் மாவட்ட அளவில், உள்ளூர் அளவில் உள்ள தலைவர்கள் மற்றும் தோழர்களின் தியாகங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். 100 ஆண்டுகளில் பல்வேறு சதி வழக்குகள், தடைகளைத் தாண்டி, கம்யூனிஸ்ட் இயக்கம் தொடர்ந்து முன்னேறுவது மிகப் பெரிய சாதனையாகும்.லட்சக் கணக்கான தோழர்களின் தியாகத்தாலும், அவர்கள் சிந்திய உதிரத்தாலும் உருவானது கம்யூனிஸ்ட் இயக்கம். ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என பலர் நம்மைப் பார்த்து ஏளனமாக கூறுவார்கள். இந்த பிழைக்கத் தெரியாதவர்களால் தான்உலகம் இன்று வரை பிழைத்துக்கொண்டி ருக்கிறது.அரசியலில் மிகப்பெரிய கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. இந்த உலகில் பட்டினி மனிதன் இருக்கும் வரை கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்கும். சொர்க்கம் என்பது வானில் இல்லை; இந்த மண்ணில் தான் உள்ளது. அதை உருவாக்கிக் காண்பிப்போம் என மக்களிடம் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே கூறி வருகிறது. பல்வேறு தியாகங்கள் நிறைந்தது கம்யூனிஸ்ட் இயக்கம் ஒன்று தான்.
தியாகி சங்கரலிங்கனார் இறக்கும் போது, அவரது உடலை நம்மிடம் ஒப்படைக்கச் சொன்னார். அவருடைய உடலோடு, அவரது தமிழ் மொழி உணர்வையும் பெற்றுக் கொண்டுதொடர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.அந்த வகையில் தமிழக செங்கொடி இயக்கத்திற்கு வழிகாட்டியாக, உரமூட்டுவதாக விருதுநகர் மாவட்டம் உள்ளது. தீக்கதிர் நாளிதழை பாதுகாப்பதிலும், அதற்கு ஊழியர்களை வழங்கியதிலும் விருதுநகர் மாவட்டம் முன்னுதாரணமாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
கே.அர்ஜூனன்
விழாவில் ஏற்புரை நிகழ்த்திய கட்சியின் மாவட்டச் செயலாளரும் நூலாசிரியருமான கே.அர்ஜூனன் பேசியதாவது:
கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா துவங்கிய போது, தோழர் செல்லப்பிள்ளை யுடன் உரையாடினேன். அதை முகநூலில்வெளியிட்டேன், அதைப்பலர் பாராட்டி பேசினர். இதையடுத்து, தோழர் எஸ்.ஏ.பெருமாளின் ஆலோசனையின் படி இந்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். கிடைக்கும் நேரத்தில் பல புத்தகங்களை படித்தேன். தோழர்களை சந்தித்து பேசினேன். அதன் மூலம் புத்தகத்தை எழுத முடிந்தது.இதற்கு முன்பு எழுதியது பட்டினிப் பட்டாள பாதயாத்திரை என்ற புத்தகம். அப்போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் எஸ்.பெரியசாமியிடம் விபரங்களை கேட்டு அப்புத்தகத்தை எழுதி முடித்தேன்.வத்திராயிருப்பு பகுதியில் 1940-60 வரை வீரம் செறிந்த பல போராட்டங்கள் நடந்துள்ளன. 59 பேர் மீது இராமநாதபுரம் சதி வழக்குபோடப்பட்டது. அதில் 49 பேர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் களாகவும், அதில் 40 பேர் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.1944ம் ஆண்டிலேயே விருதுநகரில் தொழிற்சங்க இயக்கம் வலுவாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் போட்ட கூலி ஒப்பந்த நகல் உள்ளது. அதையும் புத்தகத்தில் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.விழாவிற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையேற்றார். நகரச் செயலாளர் பி.மாரியப்பன் வரவேற்க, மேற்கு ஒன்றியச் செயலாளர் முனியசாமி நன்றி கூறினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சுகந்தி, எம்.மகாலட்சுமி, எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பி.ராஜேந்திரன், எம்.கண்ணன், வீ.மாரியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.