tamilnadu

img

அழிந்துபோன ரூ. 1,500 கோடி வர்த்தகம் கண்ணீர் வடிக்கும் தோட்டக்கலை விவசாயிகள்

கிருஷ்ணகிரி, ஏப்.19- ஊட்டி, கொடைக்கானலை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்கள், பேரிகை, தளி, ஜவளகிரி, ராயக்கோட்டை, பாகலூர், உத்தணப்பள்ளி, கெலமங்கலம் பகுதிகளிலும் ஏற்றுமதிக்கேற்ற விலைமதிப்பு மிக்க தரமான காய்கறி, பூக்கள் விளைவதற்கான நல்ல மண் வளம் உள்ளது. மேலும் தட்ப வெப்ப நிலையும் சாதகமாக நிலவுகிறது. இதனால் தோட்டக்கலை துறை மற்றும் விவசாயம் (பசுமை குடில்) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறந்து விலங்குகிறது. இங்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல்‌ ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்ளுர் வர்த்தகத்தையும் சேர்ந்தால் ஆண்டுக்கு ரூ. 1500 கோடியை தாண்டும்.

சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 3500 ஏக்கருக்கரில் அரை ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பசுமை குடில் (பாலிடெண்ட் ஹவுஸ்) அமைத்து தோட்டக்கலை விவசாயம் செய்து வருகின்றனர். இதில், விலை உயர்ந்த பச்சை, மஞ்சள் நிற குடை மிளகாய், நீண்ட மிளகாய், விலை உயர்ந்த காய்கறிகள், டச், மஞ்சள், வெள்ளை, பச்சை, வைலட் நிற ரோஜாக்கள், ஜெர்பரா, கிரிசாந்தம், காரனேசன் உட்பட பல பூக்கள் விளைவிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் இதர மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், அயல் நாடுகளுக்கு காதலர் தினம், அன்னையர் தினம், திருமணம், குடும்ப விழாக்கள், அரசு விழாக்கள், சுதந்திர தினத்திற்கு என ஏற்றுமதியை இலக்காய் வைத்தே விளைவிக்கப்படுகிறது. விற்பனைக்கான பூச்செடிகளும், மரம், காய்கறி செடிகளும் நர்சரிகள் மூலம் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 144 தடை காரணமாக, இந்த தோட்டக்கலை துறை விவசாயிகளின் விளை உயர்ந்த பூக்கள். காய்கறிகள் மற்றும் நர்சரி செடிகள், செடிகளிலேயே அழுகி, வாடி, கருகி வருகிறது. மருந்து தெளித்தல், அடிப்படை கட்டமைப்பு வேலைகள் செய்வதற்கான ஆட்கள் யாரும் வேலைக்கு வர முடியாத நிலையாலும், விழாக்கள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் இல்லாததாலும் ஏற்றுமதி செய்யவும், உள்ளூர்களில் விற்கவும் முடியாத நிலை உள்ளது. இதனால், பசுமைக்குடில் அமைத்துள்ள அனைத்து தோட்டக் கலைத் துறை விவசாயிகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

செடிகள் பூக்கள், காய்கறிகளோடு, நர்சரிகளும் அழிந்து வருகின்றன. பசுமை குடில்களின் பாத்தி கட்டுதல், நாற்றுகள் உருவாக்குதல், வாங்கி நடுதல், படர்வதற்கு கம்புகள், தூண்கள் நடுதல், மருந்தடித்தல், கலை பிடுங்குதல் பசுமை குடில்கள், சொட்டு நீர் பாசனம் அமைத்தல் உட்பட அடிப்படை வேலைகளுக்கு நிறைய மூலதனம் செலவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாடி, அழுகி, கருகிப்போன பூக்கள், காய் கறிகளுடனான செடிகளை வேறு வழி இல்லாமல் விவசாயிகளே அழிக்கின்றனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஞ்சியிருந்த பசுமைக்குடில்களும் சில தினங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பிடிங்கி தூக்கிவீசப்பட்டு சிதிலமடைந்தன. இந்த நிலையில் தோட்டக் கலை துறையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளும் கடும் வேதனையில் கையறு நிலையிலுள்ளனர். எனவே தோட்டடக்கலை துறை விவசாய வேலைகளில் கடும் பாதிப்புக்குள்ளான பசுமை குடில் (பாலிடென்ட் ஹவுஸ்)களை அரசு மாவட்ட உயரதிகாரிகள் பார்வையிட்டு பாதிப்புகளுக்கேற்ப முழு நிவாரணம் வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஹார்டி கல்சர் (தோட்டக் கலை) சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் மகேஷ் ரெட்டி, பொருளாளர் ராமண்ணா, நிர்வாகிகள் சம்பங்கி ராமரெட்டி, சின்னப்பையா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி, விவசாயத்துறை மாநில முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட இணை இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

நர்சரி செடிகள் வளர்க்கும் அகலக் கோட்டை, பால தோட்டனப்பள்ளி, ஜவளகிரி, மேடு பெத்த கோட்டா விவசாயிகளும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கூறுகையில், “தோட்டக்கலை துறையினர், நர்சரி விவசாயிகள் உட்பட பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.