tamilnadu

‘இருதலைக் கொள்ளிகளாக’ தவிப்பு: மனஉளைச்சலில் அரசு ஊழியர்கள்!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல அரசுத் துறைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் 60 விழுக்காடு பயணிகளுடன் இயக்கப்படுகிறது. இரு நகரங்களுக்கு இடையே உள்ள முக்கிய கிராமப்புற ஊர்களுக்கு செல்ல வேண்டிய தினக்கூலி, கட்டுமான தொழிலாளர்கள் கடைகளில் பணிபுரியும் பெண்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் போதுமான பேருந்து வசதி இல்லாததால், கிடைக்கும்  பேருந்துகளில் ஏறி தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் நடத்துனரோடு சண்டையிட்டு பயணம் செய்கின்றனர்.

பயணிகளுக்கு சானிடைசர் கொடுத்து ஏற்ற வேண்டும் என நிர்வாகத்தில் கூறியிருந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் பெரிய அளவிற்கு செய்யப்படவில்லை. வழக்கமான காலங்களில் பேருந்துகளில் ஏறி இறங்குவதை போலவே தற்போதும் பயணிகள் ஏறி இறங்குகிறார்கள். 40 கி.மீ பயண தூரத்தையே ஒரு நாளைக்கு குறைந்தது 7 முறை இயக்க வேண்டிய சூழலில் யாரிடமிருந்து யாருக்கு தொற்று பரவும் என்பது தெரியாத நிலையில் உயிரை பணயம் வைத்து பணிபுரிய வேண்டியுள்ளது. அதேபோல், அடிக்கடி பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்பதும் ஏட்டளவில் உள்ளது. முகக்கவசம், சனிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பேருந்துகள்  இயக்கப்படுவதும் ஆபத்தான அறிகுறிகளாகும். கொரோனா பேராபத்து காலத்தில்கூட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிலர் வசூலை அதிகரிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு, மதுரைக்கு சென்ற பேருந்தில் வசூல் குறைவு என உளுந்தூர்பேட்டை கிளை மேலாளர் சில நாட்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.

விடாத கொரோனா...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரே நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளது பாதுகாப்பு குறைபாட்டின் தீவிரத்தை உணர்த்துகிறது. கள்ளக்குறிச்சி நகரில் மட்டும் தனியார் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் நோய்த் தொற்றால் பாதித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணியாற்றும் பல மருத்துவர்கள் தனியாகவும் சொந்த கிளினிக்கில் மருத்துவம் பார்ப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் ஆசிரியர் உட்பட நான்கு பேர் பலியானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், அரசு கட்டாயப்படுத்துவதால் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும், பணியிடத்தில் நிலவும் சூழலால் உயிர் வாழ முடியுமா என்ற மன உளைச்சலும் இவர்களை இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கவிட்டுள்ளது.

அரைகுறை விபரம்...

தேவபாண்டலத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் இன்று வரைக்கும் கணக்கில் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சுகாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண், பெண், வயது போன்ற முழு விபரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை. மாவட்ட நிர்வாகத்தால் இது தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. களத்தில் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும், பெண்களும் பெரும் மன உளைச்சலுடன் பணிக்கு சென்று திரும்பும் நிலை நிலவுகிறது.

-வி.சாமிநாதன்