15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகளிலும் நீர் வற்றியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2004ஆம் ஆண்டு இதுபோன்ற தண்ணீர் பற்றாக்குறையை சென்னை சந்தித்திருந்தது.கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க போதிய மழை இல்லாத காரணத்தினாலும் மழைநீரை சேகரிக்க முறையான முயற்சிகள் இல்லாத காரணத்தினாலும் நீர்நிலைகள் நீரின்றி வற்றிப் போயிருக்கிறது. மேலும் சென் னையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட் டம் 400 அடி முதல் 600 அடி வரை உள்ளே சென்று விட்டது.சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் நான்கு ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி நீர். ஆனால் தற்போது வெறும் 239 மில்லியன் கன அடி மட்டுமே இருக்கின்றது. 2004ஆம் ஆண்டு இதே நாளில் இந்த நான்கு ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவில் வெறும் 164 புள்ளி 9 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் நீர் பற்றாக்குறையை சென்னை சந்திக்கப் போவதை இந்த விவரங்கள் உணர்த்துகிறது.
செம்பரம்பாக்கம்
சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளில் பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தில் வெறும் 6 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இது ஒருபுறமிருக்க இந்த நான்கு ஏரிகளில் சோழவரத்தில் ஒரு மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இதனால் குடிநீருக்காக தண்ணீர் எடுப்பதை சென்னை குடிநீர் வாரியம் இந்த 2 ஏரிகளில் நிறுத்தி வைத்துள்ளது. பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் முறையே 162 மற்றும் 70 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருக்கிறது. சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக இந்த 2 ஏரிகளில் மோட்டார் பம்புகள் மூலம் நீர் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஒரு நாள் தேவையான 550 மில்லியன் லிட்டர் குடிநீர் தற் போது 500 மில்லியன் லிட்டராக குறைந்துள்ளது.தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 39,292 ஏரிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றில் பல்லாயிரம் ஏரிகள் அழிக் கப்பட்டு இருந்த இடமின்றி காணாமல் போய் விட்டதாக தெரிவிக்கின்றனர். கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் ஏரி, குளம் என 474 நீர் நிலைகள் இருந்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு அதுவே 43 ஆக குறைந்துள்ளது. தற்போது அதிலும் 96 சதவீத நீர்நிலைகளை காணவில்லை அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
காணாமல் போன ஏரிகள்
சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்களின் பட்டியல் சில: 1. நுங்கம்பாக்கம் ஏரி (தற்போது வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக் கத்தின் சில தனியார் நிறுவனங்கள்), 2. தேனாம் பேட்டை ஏரி, 3. வியாசர்பாடி ஏரி, 4. முகப்பேர் ஏரி, 5. திருவேற்காடு ஏரி, 6. ஓட்டேரி, 7. மேடவாக்கம் ஏரி, 8. பள்ளிக்கரணை ஏரி, 9. போரூர் ஏரி பாதி, 10. அம்பத்தூர், ஆவடி ஏரிகள் பாதி (வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்), 11.கொளத்தூர் ஏரி, 12. இரட்டை ஏரி பாதி, 13.வேளச் சேரி ஏரி (100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்), 14. பெரும்பாக்கம் ஏரி, 15.பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்), 16. கல்லு குட்டை ஏரி, 17. வில்லிவாக்கம் ஏரி, 18. பாடியநல்லூர் ஏரி, 19. வேம்பாக்கம் ஏரி, 20. பிச்சாட்டூர் ஏரி, 21. திருநின்றவூர் ஏரி, 22. பாக்கம் ஏரி, 23. விச்சூர் ஏரி, 24. முடிச்சூர் ஏரி, 25. சேத்துப்பட்டு ஏரி, 26. செம்பாக் கம் ஏரி, 27. சிட்லபாக்கம் ஏரி, 28. மாம்பலம் ஏரி, 29. கோடம்பாக்கம் டேங்க் ஏரி, 30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம், 31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம், 32. ஆலப்பாக்கம் ஏரி, 33. வேப்பேரி, 34. விருகம்பாக்கம் ஏரி (தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு), 35. கோயம்பேடு சுழல் ஏரி (கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்) 36. அல்லிக் குளம் ஏரி (நேரு ஸ்டேடியம்).
வீடுகளாக மாறிப்போன ஏரிகள்
சென்னையைச் சுற்றியுள்ள பல ஏரிகள் கான்கிரீட் குடியிருப்புகளாக மாறிவிட்டன. இன்னும் எஞ்சியுள்ளவை போரூர், செம்பரம் பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், பள்ளிக் கரணை சதுப்பு நில பகுதிகள் மட்டுமே. அதில் போரூர் ஏரி 800 ஏக்கரிலிருந்து 330 ஏக்கருக்கு சுருங்கிவிட்டது. சென்னை முகப்பேர், வேளச்சேரி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் பல வீட்டு வசதித் திட்டங்கள் ஏரிகளில்தான் அரசால் செயல்படுத்தப் பட்டுள்ளன. மேலும் அம்பத்தூர் ஆவடி, கொரட்டூர் ஏரிகளில் கழிவுநீர் கலந்து பாழடைந்துள்ளன. ஆவடி ஏரியில்தான் ஆவடி பெருநகராட்சி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதும், மதுரையில் ஏரியில்தான் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இன்று தண்ணீர் பற்றாக்குறைக்காக பே பப்படும் நதிநீர் இணைப்பு முறையெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நீர்நிலைகள் இணைப்பு வாயிலாக எண்ணிப் பார்க்க முடியாத அளவில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு நீர்நிலை ஆக்கிரமிக்கப்படுவது படிப்படியான நிகழ்வாக அதன் தொடர்புகளான கால்வாய், கண்மாய்கள் அழிக்கப் பட்டு, சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கப்படுகிறது. புதிய நகரங்கள் உருவாகும் போது ஏரி, குளங்கள், நீர் வழித்தடங்கள் பாதிக்காமல் உருவாக்க அரசு திட்டமிட வேண்டும். உதாரணத்திற்கு மும்பை பெருநகரத்திற்கு நடுவிலேயே இன்னமும் மூன்று பெரிய ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தினசரி குடிநீர் கேட்டு சாலை மறியல் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை முதலிடம் வகிக்கிறது. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படிவடிகால்களை அமைக்கவேண்டும். மழைநீர் வடிகால், ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அருகாமையிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். வருங்காலங்களில் மழை நீர் வடிகால், ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் ஏரிகளில் எந்தவித வீட்டு மனைகளையும் அமைப்பதில்லை என்று அரசு கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் இனிவரும் காலங்களில் இதைவிடகடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
அதிகாரிகள் தகவல்
இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னையின் குடிநீர் தேவைக்கு இப்போது பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் நீரானது 15 நாட்கள் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் அதற்குப் பின்னர் வேறு ஆதாரங்களிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக நீர் எடுக்கப்படும். மேலும் சென்னை மாநகருக்கு ஒரு நாள் குடிநீர் தேவையான 550 மில்லியன் லிட்டர் 500 மில்லியன் லிட்டராக குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை காப்பாற்றும் வீராணம்
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதன்மூலம் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர் நீர் தினசரி சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதில் 10 மில்லியன் லிட்டர் நீர் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப் படுகிறது. இதைத் தவிர்த்து நெய்வேலி மற்றும் கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் தேவைக்காக நீர் எடுக்க வாரியம் முடிவெடுத்துள்ளது. மேலும் பூண்டி மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருக்கும் விவசாயக் கிணறுகளில் இருந்து 120 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-அம்பத்தூர் எஸ்.ராமு