மோடி ஆட்சியின் சாதனை குறித்து உ.வாசுகி கடும் சாடல்
புதுக்கோட்டை, செப்.15 புதுக்கோட்டையில் சனியன்று நடைபெற்ற சிறப்பு மாநாட்டு பொதுக்கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி பேசியதாவது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், நுண் நிதி நிறுவனங்களின் கந்துவட்டிக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி களம் கண்டது நமது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தான். பெண்கள் அமைப்புக்கு அரசியல் தேவையில்லை என்ற கருத்து தொடர்ந்து உலா வந்து கொண்டே இருக்கிறது. தேர்தல் நேரத்தில் பெண்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தவர்கள் இந்த மக்களுக்கு விரோதமான சட்டங்களை கொண்டு வருவதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் அரசியல் என்று நாங்கள் சொல்கிறோம். இன்றைக்கு நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்குள் பெண்களும் சிக்கி தவிக்கிறார்கள். கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மோடியின் கடந்த கால ஆட்சியின் போது என்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் 45 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்று அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தனர். நாட்டில் யாரும் வேலைக்கு செல்லாமல் இல்லை. மிகவும் குறைந்த கூலிக்கு சென்று கொண்டு தான் உள்ளார்கள். இதெல்லாம் அரசு வழங்கிய வேலை வாய்ப்பு இல்லை.
மோடியின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து 2 மடங்காக ஆன போது நமது சொத்துக்களின் மதிப்பும், நமது சம்பளத்தின் மதிப்பும் உயர்ந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த வளர்ச்சியாக இருக்கும். ஆனால் நமது வீடுகளில் பசியால் வயிற்றில் ஈரத்துணியை கட்டி படுத்துக் கொண்டிருக்கிறோம். இது தான் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமை. பொருளாதார நெருக்கடியாகும்.
விலை உயர்வுக்கெதிராக இந்து முன்னணி போராடியதா?
ஊர் ஊராக பிள்ளையார் சிலையை வைத்து ஊர்வலம் நடத்திய இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிசத் போன்ற சங் பரிவார் அமைப்புகள் நாட்டில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்ட போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தினார்களா? இந்து மக்களுக்கான அமைப்பு என்று கூறிக்கொள்கிறார்கள், ஆனால் வாகன உற்பத்தி நிறுத்தத்தில் வேலையிழந்தவர்கள் இந்துக்கள் இல்லையா? வேலையில்லாத திண்டாட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள் இல்லையா?
12 லட்சம் வீடுகளை வாங்க ஆள் இல்லை
மக்கள் ஓலா, ஊபர் வாகனங்களை பயன்படுத்துவதால் வாகன உற்பத்தி குறைந்தது என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதின்கட்காரியோ வீடுகளில் கார் வைக்க இடமில்லை; அதனால் கார் வாங்கவில்லை என்கிறார். ரூ.5க்கு விற்கும் பார்லே பிஸ்கட் கூட வாங்க முடியாமல் போனதால் அந்த கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார்கள். மோடி ஆட்சியில் ரியல் எஸ்டேட் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் உள்ளது. நிலம், வீடு வாங்க இந்த காலம் ஏற்றதல்ல என்று ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசு மற்றும் அமைச்சர்களும் பாஜகவிற்கு திறமைசாலி அடிமைகளாக உள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிகர் ராமதாஸ் ஒரு வசனம் பேசுவார். அதில், நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்பார். அதே போல பாஜக சொல்வதை செய்யும் திறமைசாலி அடிமைகளாக அதிமுக அமைச்சர்கள் உள்ளார்கள். மோடி அரசு கொண்டு வருகிற திட்டத்தை சிரமேற்கொண்டு செய்து முடிக்கிறார்கள்.
பின்லாந்துக்கு நேர்மாறான கல்வி முறை
புதிய கல்விக்கொள்கையை இப்போதே அமலாக்கத் தொடங்கிவிட்டார்கள். பின்லாந்து, கியூபா போன்ற நாடுகளில் தான் சிறந்த கல்வி முறை அமலாகிறது. 12 ஆண்டுகள் வரை மாணவ, மாணவியர்களுக்கு பரிட்சை இல்லை. எல்லா பள்ளிகளும் அரசு பள்ளிகளாக உள்ளன. தனியார் பள்ளிகள் இல்லை. ஒரே மாதிரியான சமச்சீர் கல்வி சொல்லித் தரப்படுகிறது. இங்கு கல்வியாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் தேசிய கல்விக்கொள்கையை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த அறிக்கையை உருவாக்கிய கஸ்தூரி ரங்கனே கல்வியாளர் இல்லை. நம்ம ஊர்களில் கல்வியாளர்கள் எல்லாம் முன்னாள் சாராய வியாபாரிகளாக இருக்கிறார்கள். அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் பின்லாந்தில் உள்ள கல்விமுறை போல கொண்டுவருவதாக கூறுகிறார். உண்மையில் சொல்லப் போனால் பின்லாந்தில் உள்ள கல்விக்கு நேர் மாறான கல்விமுறையை இங்கு தமிழக அரசு அமலாக்கி வருகிறது. இப்போது நமது முதல்வர் வெளிநாடுகளைச் சுற்றி முடித்து விட்டு வந்துள்ளார். தற்போது இஸ்ரேல் செல்வதாக கூறியிருக்கிறார். இஸ்ரேல், அமெரிக்க ஆதரவுடன் பெரும் அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள நாடு. ஆறுகள், நீர்நிலைகள் இல்லாத அந்த நாட்டில் நீர்வளம் குறித்து தெரிந்துகொள்ள செல்கிறார்களாம். எனவே மக்கள் விரோத பாஜக, அதிமுக அரசுகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் போராட வேண்டியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு வாசுகி பேசினார். (நநி)