மா மேதை காரல் மார்க்ஸ்
மனித குலம் காதலைப் பற்றி பல கதைகளையும் காவியங் களையும் படைத்திருக்கிறது.அவற்றுள் மார்க்ஸ் ஜென்னி காதல் கதை உண்மையானது.மேன்மை யானது 1881ஆம் ஆண்டின் இறுதியில் ஜென்னி மரணமடைந்த பொழுது “இனி மூரும் (மார்க்சும்) இறந்துவிட்டார்” என்று கூறினார் ஏங்கெல்ஸ். இதைக் கேட்ட மற்றவர்கள் திகைப்படைந்தனர். மார்க்சும் ஜென்னியும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் மெய்யா கவே வாழமுடியாது. மார்க்ஸ் இனிமேல் உயிர் தரிக்கமாட்டார் என்பதை ஏங்கெல்ஸ் நன்றாக அறிந்திருந்தார். அவர் கூறியபடியே நடந்தது.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் நட்பு. ஒருவரின்றி இன்னொருவர் இல்லை எனுமளவில் உணர்வுப்பூர்வமான நட்பில் திளைத்தனர் இருவரும். மார்க்சின் மூலதனம் உள்ளிட்ட நூல்கள் ஏங்கெல்ஸ் இல்லாமல் வெளியிட்டிருக்க வாய்ப்பேயில்லை. “நான் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் இன்னும் நேசிக்கி றேன். அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. இல்லை, அவர்கள் உண்மையான மனிதர்கள்! நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக்கூடாது” - இது லெனின் கூற்று. காரல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோரின் முதல் சந்திப்பு 1842 நவம்பரில் கொலோனில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் பாரிசில் மீண்டும் சந்தித்தபோது தாங்களிருவரும் சமூக வளர்ச்சியைப் பற்றி அடிப்படையில் ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு வெவ்வேறு பாதைகளின் மூலமாக வந்திருப்பதைக் கண்டனர். அது அவர்களுக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. மார்க்சியம் ஒரு மனிதருடைய பெயரைத் தாங்கியிருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்ஸ் ஒருமுறை எங்கெல்ஸைத் தன்னுடைய ‘இரண்டாவது நான்’ என்று அறிமுகம் செய்தார்.
ஏங்கெல்ஸ் மார்க்ஸைக் காட்டிலும் இரண்டு வயது இளையவர் என்றாலும் அவரைக் காட்டிலும் முன்பே பத்திரிகைகளில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார். அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு உருவரைகள் என்ற தலைப்பில் ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரை 1844ல் வெளியாயிற்று.எங்கெல்ஸுக்கு அப்பொழுது 24 வயதே ஆகியிருந்தது. மார்க்ஸ் மூலதனத்தில் இக்கட்டுரையை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். இதற்கு ஓராண்டுக்குப் பின்பு இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூலை ஏங்கெல்ஸ் வெளியிட்டார். மார்க்சும் லெனினும் இந்நூலை உயர்வாகக் கருதினர்.
மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் வாழ்க்கை நடத்துவதற்கு எந்த வழியும் இல்லாமலிருந்தபடியால் ஏங்கெல்ஸ் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். எனவே மான்செஸ்டரில் அவருடைய தகப்பனார் பங்குதாரராக இருந்த நெசவாலையில் எழுத்தராக வேலை செய்தார். இக்காலகட்டத்தில் மார்க்சுக்கு ஏங்கெல்ஸ் எழுதிய கடிதங்களுடன் காசோலையையும் சேர்த்தே அனுப்பினார். மார்க்ஸ் தன்னுடைய லண்டன் வாழ்க்கை காலகட்டத்தில் எங்கெல்ஸைக் கலந்து கொள்ளாமல் எந்த செயலையும் செய்ததில்லை. இருவரும் இணைந்து புனிதக் குடும்பம்,ஜெர்மன் சித்தாந்தம் ஆகிய நூல்களைக் கூட்டாக எழுதினர். 1848ஆம் ஆண்டு மார்க்சும் எங்கெல்சும் இணந்து தயாரித்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை உலகப் புகழ் வாய்ந்தது.
ஏங்கெல்ஸ் லண்டனுக்குச் செல்கின்ற பொழுது இரு நண்பர்களும் நேரடியாகச் சந்தித்துக் கொள்வார்கள். மார்க்ஸ் குடுமபத்தில் ஆனந்தம் பொங்கும். மார்க்ஸின் பெண் மக்கள் எங்கெல்ஸை சித்தப்பா என்றழைப்பார்கள். ஏங்கெல்ஸ் தன்னலமின்றிப் பல ஆண்டுகள் உதவி செய்திருக்காவிட்டால் மார்க்ஸுக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதைச் சொல்வது கடினம். அவர் தன்னுடைய நண்பரின் அறிவியல் ஆய்வுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்கா கவே தன்னுடைய சொந்த அக்கறைகளை ஒதுக்கி வைத்தார். மார்க்ஸ் இதை நினைத்து எப்போதுமே வருத்தமடைந்தார். மார்க்ஸ் மரணமடைந்த பிறகு ஏங்கெல்ஸ் சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவரானார். மார்க்ஸின் மரணத்திற்குப் பின் மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை முடிப்பது எங்கெல்ஸின் முக்கியப் பணியாயிற்று.
“மனிதகுல நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்” மார்க்ஸின் இத்தகைய வரிகள் அர்த்த அடர்த்தி மிக்கவை என்பது மார்க்ஸுக்கும் அவருக்கு இரு கண்களாகத் திகழ்ந்த ஜென்னி மற்றும் எங்கெல்சுக்கும் பொருந்துமெனின் மிகையன்று.
பெரணமல்லூர் சேகரன்
மாமேதை மார்க்ஸ் நினைவுநாள் (மார்ச் 14)