tamilnadu

img

பிரான்ஸ் : போராட்டத்தின் புதிய உச்சத்தில் தொழிலாளர்கள் - கணேஷ்

பிரான்சில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ரயில்வே தொழிலா ளர்கள், புதிய உச்சத்தைத் தொடுகிறார்கள். பிரான்சில் ரயில்வே துறையை தேசிய ரயில்வே நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. 1938 ஆம் ஆண்டில் உருவான இந்த நிறுவனம் முழுக்க, முழுக்க அரசுத்துறையாகவே இருக்கிறது. நிறுவனத்தின் வளர்ச்சியில் இதன் தொழிலாளர்களின் அளப்பரிய உழைப்பு முக்கியமான பங்காகும். குறிப்பாக, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிப் படையால் அழித்தொழிக்கப்பட்ட ரயில்வே கட்டமைப்பை அவர்கள் மீட்டெடுத்தனர். அது மட்டுமல்ல, நாஜிப்படைகள் ரயில்வே சொத்துக்களை அழிக்க முற்பட்டபோது, மக்கள் சொத்தை நாச மாக்க விட மாட்டோம் என்று ரயில்வே தொழிலா ளர்கள் எதிர்த்து நின்றனர். இதனால் 1,200 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இத்தகைய பாரம்பரியம் உள்ள ரயில்வே தொழிலாளர்கள் தற்போது தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 64 ஆக பிரான்ஸ் அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, ரயில்வே தொழிலாளர்கள் நீண்ட நெடிய போராட்டத்தைத் தொடர்கிறார்கள். டிசம்பர் 5 ஆம் தேதி துவங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் நீடிக்கிறது. பிரான்சின் வரலாற்றில் மிக நீண்ட நெடிய போராட்டமாக இது இருக்கும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 1986-ஜனவரி 1987 கால கட்டத்தில் நடைபெற்ற போராட்டம் 29 நாட்கள் தொடர்ந்தது. ஊதியத்தில் மாற்றங்கள் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடை பெற்றது. 2018ல் அரசுத்துறையில் ரயில்வே துறை தொடர்வதில் மாற்றம் செய்ய பிரான்ஸ் அரசு விரும்பியபோது, 36 நாட்கள் தொழிலா ளர்கள் போராடினார்கள். ஆனால் இந்தப் போ ராட்டம் தொடர்ந்து 36 நாட்கள் நடைபெற வில்லை. தற்போது நடைபெற்று வரும் போராட்டம் இவற்றையெல்லாம் தாண்டி விடும். மக்கள் சிரமப்படுவார்கள் என்று அரசு கூறினா லும், நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மக்ரோன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த வித ஆர்வத்தையும் காட்டவில்லை என்பதே அதற்குக் காரணமாகும். 

சில நாட்கள் விட்டு விட்டால், போராட்டம் தானாகவே நின்று விடும் என்று பிரான்ஸ் அரசு திட்டமிட்டது. ஆனால், ஒரு மாத காலத்தைத் தொடவிருக்கும் வேலை நிறுத்தம் மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. இது பற்றிக் கருத்துச் சொன்னவர்களில் சிலர், “வேலை நிறுத்தம் எங்களுக்கு சிரமத்தை ஏற் படுத்தியுள்ளது உண்மைதான். ஆனால் நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடுவதால் நாங்கள் அதை ஆதரிக்கிறோம்” என்கிறார்கள். இவர்கள் அன்றாடம் வேலைக ளுக்குச் செல்வதற்காக ரயில்களைப் பயன் படுத்துபவர்களாவர். அண்மையில் நடந்த கருத்துக் கணிப்பில், பெரும்பாலான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த மக்கள் ஆதரவுதான் தொழிலாளர்களுக்கு ஊட்டச் சத்தாக இருக்கிறது.  பிரான்ஸ் ரயில்வே துறையின் பொறியி யல் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ரயில்கள் ஓடுவதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். முடிந்துவிடும் என்று அரசு எதிர்பார்த்த நிலையில், ரயில்வே தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜனவரி 9 ஆம் தேதியன்று நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன. தொழி லாளர்கள் ஒற்றுமை பரவுகிறது.

;