tamilnadu

img

அதானிக்காக மூடப்படும் அனல் மின் நிலையங்கள்! - எஸ்.ராஜேந்திரன்

இந்திய மின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வகையில் 63 சதவீதம், அதாவது மொத்த மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களே உற்பத்தி செய்து வருகின்றன. 22.5 சதவீதம் மரபுசாரா எரிசக்தி (காற்று, சூரிய ஒளி, தாவர எண்ணெய், சாண எரிவாயு) மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்திய மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்க ளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு பெரும் பங்கை செலுத்தி வருகிறது. அனல் மின் நிலை யங்களுக்கு தேவையான நிலக்கரி ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டுமே நிலக்கரி கிடைக்கிறது. அனல் மின் நிலையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்வதில் கூடுதல் செலவீனம் இருந்தாலும் மக்களின் தேவையை அறிந்து மின்சாரத்துறை சேவைத்துறையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து உருவாக்கப்பட்டவை தான் அனல் மின் நிலையங்கள். நாடு சுதந்திரம் அடைந்தபோது 1156 மெகாவாட் மின் உற்பத்தியில் துவங்கி 78 ஆண்டுகள் கடந்து 3,44,689 மெகாவாட் மின் உற்பத்தியை அனைத்து வழிகளிலும் (அனல், புனல், எரிவாயு, அணு, மரபுசாரா எரிசக்தி) செய்துள்ளது.

தமிழகத்தில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி இருப்பதை கண்டறிந்து அதன் மூலம் மின் உற்பத்தி செய்யலாமென உறுதியாக நின்று போராடியவர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி அவர்களும் அனந்த நம்பியார் அவர்களும் ஆவார்கள். இதற்கு பின்பு தான் அன்றைக்கு இருந்த மத்திய அரசின் தொழில்துறை அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி நெய்வேலியில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கும், மின் உற்பத்தி செய்வதற்கும் நிதி ஒதுக்கினார். இது வரலாறு. தற்சமயம் நெய்வேலியில் 2900 மெகாவாட் மின் உற்பத்தி செய்கின்ற நிலையை எட்டியுள்ளது. 1956ஆம் ஆண்டில் பணியை துவக்கி உற்பத்தியில் ஈடுபட்டு இன்றைக்கும் செயல்பட்டு வரும் நெய்வேலி அலகை மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட் அறிவிப்பால் மூடுவிழா காண உள்ளது. அதே போல மேட்டூர் அனல் மின் நிலையம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலைய மும் விரைவில் காண உள்ளது.

இந்தியாவில் எடுக்கப்படும் நிலக்கரி எரியும் கலோரி யின் அளவு 4000; இது எரியும் போது அதிகமான கார்பன் வெளியாகும். இதைக் கட்டுப்படுத்த நவீன தொழில் நுட்பங்கள் இன்றைக்கு வந்துள்ளன. ஆனால் வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் எரியும் கலோரியின் அளவு 4,700, இது அதிக அளவில் கார்பனை வெளியிடாது என நினைக்கிறார்கள். உணமை அதுவல்ல, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி விரயமாவதோடு அதானிக்கு அந்த உரிமமும் வழங்கி அதானியை பெரும் முதலாளி ஆக்குகிறார்கள்.

பட்ஜெட் அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு  அளவை விட அதிக கரும்புகையை வெளி யேற்றும் அனல் மின் நிலையங்களை மூடுவதோடு அந்த இடங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான இடத்தை அதானி வகையறாக்களுக்கு கொடுப்பதற்கான ஒரு மறைமுக ஏற்பாடு. மாநில அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலை யங்களை மூடுவதன் விளைவாக அதானியின் நிறு வனங்கள் சூரிய ஒளி மூலமும், நிலக்கரி மூலமும் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வாங்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படும் நிலை உருவாகும். இந்தியச் சந்தையில் அம்பானிகளும், அதானிகளும் மட்டுமே இருக்கும் நிலை உருவாகும். மின்சாரம் என்பது எட்டாக் கனியாக, சந்தைப் பொருளாக மாறும். கிராமப்புறங்க ளுக்கு விவசாயிகளுக்கு மின்சாரம் என்பது கேள்விக்குறி யாக மாறும். இலவச மின்சாரம் ரத்தாகும். அதிக விலை கொடுத்து விவசாயி மின்சாரத்தை பெற வேண்டி இருக்கும்.

மீடியேட்டராக மாறும் மின்வாரியம்

மின்சார வாரியம் என்று ஒன்று நிச்சயமாக இருக்கும். ஆனால் அது அதானிக்கும் மக்களுக்கும் மீடியேட்டரா கவே மட்டும் செயல்படும். அதோடு மின் நுகர்வோர்களின் இணைப்பில் தற்போது உள்ள பழைய கன்வென்ஷனல் மீட்டர்களை மாற்றி ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான நடவடிக்கையும், அடுத்த மூன்றாண்டுகளுக்குள் மாற்ற வேண்டும் என்றும், மின் நுகர்வோர்களே சப்ளையரை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் மின் வாரியங்களை விநியோக கம்பெனிகளாக (Discom) மாற்ற வேண்டுமென பட்ஜெட்டில் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட்டில் 20 கோடிக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளும் 5 கோடிக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் தாழ்வழுத்த வணிகப் பயன்பாட்டிலும் இருக்கிறது.

மின்சார சட்டத்திருத்த மசோதா 2018- முழுமையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் (இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து மின் ஊழியர்கள் போராடி வருகிறார்கள்) இந்த மசோதாவில் சொல்லப்பட்ட தனியார் மின் உற்பத்தியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை மின்நுகர்வோர்களுக்கு வழங்கும் வகையில் மீட்டர்களை மாற்ற வேண்டுமென பட்ஜெட்டில் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனியார் உரிமையாளர்களுக்கு இலாப கரமான மின் விநியோக பகுதியில் ஈடுபடுவதற்கு வசதியாக இருக்கும் வகையில் மீட்டர்களை மாற்றுவதற்கான ஏற்பாடு தான் இது.

இந்த ப்ரிபெய்டு ஸ்மார்ட் மீட்டர் மாற்றும் திட்டத்தால் மின் நுகர்வோர்கள், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது போல மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம். இதில் மறைந்திருக்கும் ஆபத்து என்னவென்றால் மின் நுகர்வோர் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். மேலும் ஸ்மார்ட் மீட்டர் மாற்றப்படுவதற்கான கட்டணத்தை மின் நுகர்வோர்களே செலுத்த நேரிடலாம். இந்திய நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கீட்டு பணியாளர்கள் (Meter Readers) வேலை இழக்கும் நிலையோ அல்லது மாற்று வேலைக்கு செல்லும் அபாயமோ ஏற்படும் நிலை உள்ளது. நட்டம் விளைவிக்கும் பகுதிக்கு அரசுக்கு சொந்தமான மின் விநியோக கம்பெனிகளே செய்ய வேண்டும் என்றும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மின்வாரிய தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன் புதிய வேலை வாய்ப்புகளும் பறிபோகும் வாய்ப்புள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி அரசு எந்தவொரு புதிய மின் நிறுவனத்தையும் துவங்கவில்லை. மக்களின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வரும் உழைப்பால் உருவாக்கப்பட்ட பொதுத்துறைகளை ஒவ்வொன்றாக கூவிக்கூவி விற்றுக் கொண்டு வருகிறது.

இந்த அரசு மக்களுக்கான அரசல்ல! தொழிலாளர்க ளுக்கான அரசல்ல, விவசாயிகளுக்கான அரசும் அல்ல, அப்படியானால் யாருக்கான அரசு? அதானி வகையறாக்க ளுக்கான அரசு.

இந்திய மின்துறையை நாசமாக்கும் மோடி அரசின் கொள்கைக்கெதிராக ஆயிரம் ஆயிரமாய் மின் ஊழியர் கள், நுகர்வோர்கள், விவசாயிகள், ஒன்றிணைவோம், போராடுவோம், மின் துறையை பாதுகாப்போம்!  

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)