tamilnadu

img

வெஃகாமை - கோவி.பால.முருகு

குறள்நெறிப் பாடல்

அறமின்றிப்  பிறர்பொருளைக்  கவரின் அந்தோ 
   அழிந்திடுமே  அவர்குடும்பம்  பழியும்  சேரும்!
அறமழிய  நடுநிலையில்  தவறும்  செயலால் 
   அடைகின்ற  பயன்கருதி பழியைச் செய்யார்!

அறவழியில் நிலையான பயனை வேண்டும்
   அறிவுடையார் அவ்வழியில் விலக மாட்டார்!
வறுமையில் உழன்றாலும்  அடக்கம் வாய்ந்தார்
    வரும்பொருளை  விருப்பமுடன்  கவரமாட்டார்!

அறிவிருந்தும் அறவழிக்குப் புறம்பாய் என்றும்
  அடுத்தவரின் பொருள்கவரல் பயன்தான் என்ன? 
அருள்விரும்பி அடைகின்ற வழியில் செல்வோன்
  அடுத்தவரின் பொருள்விரும்பக் கெட்டுப் போவான்!

பிறன்பொருளால்  நலம்விரும்பி  பறிக்கும் எண்ணம்
    பறித்தோர்க்கு  நற்பயனைத்  தாரா தென்றும்!
பிறன்பொருள்மேல் ஆசையினைக் கொள்ளா திருப்பின்
   பெற்றிருக்கும் தன்செல்வம் செழித்து நிற்கும்!

அறநெறியில் பிறர்பொருள்மேல் ஆசை கொள்ளார்
   ஆற்றலினால்  அவரிடத்தில்  செல்வம் சேரும்!
பிறன்பொருளைக் கவர்தலாலே அழிவு நேரும்
   பெற்றிடுவார் கவராதார் வாழ்வில்  வெற்றி!