tamilnadu

img

இந்நாள் மே 12 இதற்கு முன்னால்

1933 - விவசாயிகள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதற்கு மானியம் வழங்கிய, அக்ரிகல்ச்சர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆக்ட் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. உலகப் பெருமந்தம் என்றழைக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி, 1929 செப்டம்பர் 4இல் அமெரிக்கப் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியிலிருந்து தொடங்கியது. அமெரிக்கப் பொருளாதாரத்தை மிகமோசமாகப் பாதித்த இது, மக்களின் வாங்கும் சக்தியை வெகுவாகக் குறைத்தது. விவசாய விளைபொருட்கள், 1890களின் விலையைவிடக் குறைந்ததால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். பொருளாதாரத்தை மீட்க, புதிதாகப் பதவியேற்றிருந்த குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட், 100 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தைக் கூட்டி மேற்கொண்ட நடவடிக்கைகள் நியூ டீல் என்றழைக்கப்படுகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக, முதல் உலகப்போருக்கு முந்தைய விலையாவது விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக, விவசாயம் செய்யும் நிலத்தின் அளவைக் குறைப்பதன்மூலம் உற்பத்தியைக் குறைக்கவும், அதற்கு ஈடாக விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் இச்சட்டம் வழிசெய்தது. குத்தகை விவசாயிகளுக்கும் நிலவுடைமையாளர்கள்பெற்ற மானியத்தில் பங்கு வழங்கப்பட்டது. கோதுமை, பருத்தி, சோளம், நெல், பால் உள்ளிட்ட பொருட்கள் இச்சட்டத்தின்கீழ்க் கட்டுப்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்காக உற்பத்தியைக் குறைத்தாலும், மக்களின் அடிப்படைச் செலவுகள் உயர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வதாக அரசு உறுதியளித்தது. விவசாய உற்பத்தியைக் குறைப்பதற்காக, விவசாயிகளிடமிருந்த கால்நடைகளையும் வாங்கி, கறிக்குப் பயன்படுத்தியது அரசு. இந்த மானியத்திற்காக, விவசாய உற்பத்திப் பொருட்களைச் சார்ந்த தொழில்களுக்குப் புதிய வரியும் விதிக்கப்பட்டது. 1935இல் இந்த வரியைச் சட்டவிரோதம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அரசே நிதி வழங்கும் புதிய சட்டம் 1938இல் இயற்றப்பட்டது. பொருளாதார மந்தம் முடிவுக்கு வந்தாலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை கம்மாடிட்டி கிரெட் கார்ப்பரேஷன்மூலம் அமெரிக்க அரசு உறுதிப்படுத்துகிறது. விலையைப் பராமரிப்பதற்காக, கூடுதல் உற்பத்தியை இந்த அமைப்பு வாங்கி நட்புறவு நாடுகளுக்கு இலவசமாக வழங்கும். இதற்கான நிரந்தரச் சட்டம் 1949இல் இயற்றப்பட்டது. பயிர்க்காப்பீட்டுக் கழகத்தையும் 1933இலேயே தொடங்கிய அமெரிக்கா, விவசாயிகளுகக்கு மிகஅதிகப் பாதுகாப்பளிக்கும் நாடுகளுள் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.அறிவுக்கடல்