சென்னை, மே 25- இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள செய்தி வருமாறு: தமிழகத்தின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மீண்டும் ஒரு அரசாணையை எடப்பாடி அரசாங்கம் பிறப்பித்திருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் வேலைவாய்ப்பு கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடும் நெருக்கடி என்பது வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாகி வருகிறது. தமிழகத்திலும் வேலையின்மை விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்ந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகு சூழலில் தமிழக அரசாங்கம் அரசாணை 248 ஐ பிறப்பித்திருக்கிறது. இந்த அரசாணை தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை விதித்திருக்கிறது.
இந்த உத்தரவிற்குக் காரணமாக செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே அரசு செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஏற்கனவே பல்வேறு விதமான வீணான செலவுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்யலாம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாறாக, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு முதலீடு செய்யக்கூடிய வேலை வாய்ப்பு உருவாக்கத்தை தடை செய்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்பதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. தமிழக எடப்பாடி அரசாங்கம் ஏற்கனவே ஓய்வுபெறுவதை 58 வயதில் இருந்து 59 வயதாக உயர்த்தி இருக்கிறது. இதனால் புதிதாக பணியிடங்கள் காலியாகாது. இத்துடன் புதிய பணியிடங்கள் உருவாக்கக் கூடாது என்று அரசாணை போட்டிருப்பது தமிழகத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் எந்த வேலை வாய்ப்பும் இனி இல்லை என்பதற்கான முன் அறிவிப்பே ஆகும்.
அரசுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அரசு இனிமேல் தன்னுடைய பணிகளை புதிய பணி நியமனங்கள் மூலமாக மேற்கொள்ளாமல் தனியார் துறையின் மூலமாக மேற்கொள்ள உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இப்படிப்பட்ட உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கும், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் இந்த உத்தரவுகளின் மூலமாக மிகப்பெரிய துரோகத்தை தமிழக அதிமுக அரசாங்கம் இழைத்திருக்கிறது. எனவே இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகின்றது. தமிழக அரசாங்கத்தின் வேலை வாய்ப்பைப் பறிக்கின்ற செயலுக்கு எதிராக தமிழக இளைஞர்களும் அனைத்து ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.