தரங்கம்பாடி, ஆக.30- நாகை மாவட்டம் பொறையார் தவசமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் தரங்கம்பாடி புனித தெரசா மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 24 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகளில் தெரசா பள்ளி மாணவிகள் கையுந்து பந்து, எறி பந்து உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று 246 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர். சீனியர் பிரிவில் சுஷ்மா ஜோதி, சூப்பர் சீனியர் பிரிவில் தனுஷியா ஆகிய தெரசா பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டத்தை பெற்றனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சுழற்கோப்பை வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.