தஞ்சாவூர் ஜூன்.8- இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளியில் பணியமர்த்துவதை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சிவகுமார் வரவேற்றார். வட்டாரச் செயலாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு கார்த்திகேயன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். நிறைவாக நகரப் பொருளாளர் கீதா நன்றி கூறினார். 8 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். உரிமைப் போராட்டத்திற்காக போராடிய ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.