குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி:மாதம் ஒரு அதிகாரியிடம் மனு அளித்து எந்த பயனும் இல்லை
தஞ்சாவூர், அக்.18– தஞ்சை கோட்ட அளவிலான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வியாழக்கிழமை மாவட்ட ஆய்வுக்குழு அலு வலர் தவச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், மாதம் ஒருமுறை நடைபெறும் கூட்டத்திற்கு, ஒவ்வொரு மாதமும், வேறு வேறு அதிகாரிகள் வந்து மனுவை பெற்றுக் கொண்டு, அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக சென்று விடுகிறார்கள். அடுத்த முறை அந்த மனு மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என விவசாயிகள் கேட்க நினைத்தால், சென்ற மாதம் வந்த அதிகாரி வருவதில்லை. புதிய அதிகாரியிடம் கேட்டால், மீண்டும் மனுவை கொடுங்கள் என கூறி செல்லுகிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் இனி இது போன்று தவறு நடக்காது என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டத்திற்கு, கோட்டாட்சியர் வருவதில் என்ன சிக்கல் இருக்கிறது. ஒரு முறை அவர் வருகிறார். அடுத்த மாதம் வேறு அதிகாரி வருகிறார். இதனால் மனு மீது நடவடிக்கைகள் கிடப்பில் கிடக்கிறது. இதையும் தாண்டி, விவசாயிகளை காலை வரச் சொல்லி விட்டு, மதியம் தான் அதிகாரிகள் கூட்டத்திற்கு வருகிறார்கள். இதை ஆட்சியர் முறைப்படுத்த வேண்டும்” என்றனர்.