tamilnadu

img

அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு

திருச்சிராப்பள்ளி,ஜூன்,10- தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 தொகுதிகளில் அமோக வெற்றிப்பெற்றது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றிப் பெற்றது. இதனை தொடர்ந்து மண்டலம் வாரியாக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தருந்தது. இதனை தொடர்ந்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திங்களன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். திமுக மாநகர செயலாளர் அன்பழகன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலை வகித்தார். 

விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திமுக மண்டலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக எம்.பி.க்கள், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் மற்றும் கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பகுதி செயலாளர் காஜாமலை விஜிய் நன்றி கூறினார். முன்னதாக மாலை 6 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கலைஞர் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  முன்னதாக லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் நடைபெற்ற அன்பில் தர்மலிங்கம் நூற்றாண்டு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ10 லட்சம் மதிப்பில் ஏழரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்பில் தர்மலிங்கம் உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அன்பில் தர்மலிங்கம் நூற்றாண்டு மலரை வெளியிட்டார். இதனை திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: அன்பில் கிராமத்தில் பிறந்து வளர்ந்து திமுகவில் உயர்ந்த தலைவரான அன்பிலாரின் சிலையை திறப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். திமுகவினரிடம் மட்டுமின்றி அனைத்து கட்சியினரிடமும் அன்பாக பழகக் கூடியவர், ஒன்றாக பணியாற்றக் கூடியவர் அன்பில் தர்மலிங்கம். கலைஞருக்கு பெருமை சேர்த்த அன்பிலாரின் அயராத உழைப்பை எந்நாளும் மறக்க முடியாது. திருச்சி மாவட்டத்தை தீரர்களின் மாவட்டமுமின்றி திமுக தொண்டர்கள் நிறைந்த மாவட்டமுமாக உயர்த்தி உருவாக்கி காட்டியவர் அன்பிலார். இன்று அன்பிலார் வழியில் நின்று நாமும் கடமையாற்றி உறுதிமொழி ஏற்போம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை போல தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற சபதம் ஏற்போம். அதற்கு ஏற்ப கடமை ஆற்றிட உழைப்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.