ஜி.ராமகிருஷ்ணன் சாடல்
கோவை, டிச.19 – வரலாறு காணாத பொருளாதார தோல்லவியை திசை திருப்பவும், சிறுபான்மை மக்களை குறிவைத்தும் மத்திய பாஜக அரசு நாசகர சட்டத்தை இயற்றுகிறது என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று மாலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றுகையில்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு நிறைவேற்றி இருக்கக்கூடிய குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமானது. மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகையில் அந்த மாநில அரசுகள் எல்லாம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளன. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களை கைது செய்திருக்கின்றனர்.
தில்லியில் இடதுசாரி கட்சிகள் சார்பாக வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோரையும், இடது சாரி கட்சிகளின் தொண்டர்களையும் கைது செய்துள்ளனர். இதேபோல் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்
மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்தபோது இடதுசாரிகள் கட்சி சார்பில் இரண்டு திருத்தங்களை கொடுத்தோம். அதில் ஒன்று வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என்று குறிப்பிடுவதற்கு மாற்றாக அண்டை நாடுகள் என்று திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தோம். அண்டை நாடுகள் என்றால் இலங்கை, பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் வரும். மற்றொரு திருத்தத்தில் குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். ஆனால் இந்த இரண்டு திருத்தங்களையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அடுத்ததாக குடியுரிமை பதிவேடு சட்டத்தை அமல்படுத்த இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்குவதற்காக மத்திய அரசு சட்டங்களை கொண்டு வருகிறது. பொருளாதாரம் சீர்கெட்டுள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள் ளது. இந்த நிலையில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தோடு மத்திய அரசாங்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை இடதுசாரி கட்சிகள் சார்பில் வலுவான போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சட்டபேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணா கரன், யு.கே.வெள்ளிங்கிரி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர்கள் தேவராஜ், சிவசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.