tamilnadu

img

பாரத்நெட் டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு!

பாரத்நெட் திட்டத்தின் டெண்டரில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, அதனை மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் இணைப்பு வழங்குவதற்காக பாரத்நெட் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 6.25 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்த சூழலில், தமிழகத்தில் 12,524 கிராமங்களுக்கு இண்டர்நெட் இணைப்பு வழங்க 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,950 கோடியாகும்.

இந்த நிலையில், இந்த டெண்டர் விடப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், முறைகேடு நடந்துள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதையடுத்து, டெண்டர் விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழகத்தில் 'பாரத் நெட்' திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் உள்ள முரண்களைக் களைந்து மீண்டும் டெண்டர் விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.