tamilnadu

img

நாடகக் கலையின் நோக்கத்தை நிறைவேற்ற வந்த காதல் கதை! - செல்வ.ரஞ்சித் குமார்

திரை விமர்சனம்

சினிமாவின் (திரைப்படம்) தாயாக இருக்கும் நாடகக் கலையானது, தன்னால் இயன்ற மட்டும் சமூகத்திற்குத் தேவையான நற்கருத்துகளை, சக மனிதன் மீதான நேர்மறைப் பார்வையை, நாட்டுப்பற்றை, அன்றாட சமூகப் பொருளாதார அரசியலை மக்களிடையே ஊட்டவே உருப்பெற்றது.  ஆனால் வெள்ளித்திரையான பின்னர் இதில் பெருந் தொய்வு ஏற்பட்டதோடே, எதிர்மறைச் சிந்தைகளை வளர்க்க/ சமூக நீதியைக் குலைக்க / சமூகநீதிக்கு எதிரானதையே சரியெனப் புகுத்தவே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அத்தி பூத்தாற்போல், ஒரு சிலரின் படைப்புகள் மட்டுமே நாடகக் கலையின் அடிநாதத்தை உணர்ந்து அதன் நோக்கத்தை இயன்ற மட்டும் நிறைவு செய்யும் வாய்ப்புகளை மெனக்கெட்டு உருவாக்கிக் கொண்டு படைக்கப்படுகிறது. அவ்வகையில், கலைக்கான நோக்கம் உணர்ந்து எடுக்கப்பட்ட படைப்பே ராஜு முருகனின் ஜிப்ஸி. 2002 குஜராத் மதக்கலவரத்தின் கோரத்தை வெளிக்காட்டிய ஒற்றைப் புகைப்படம் உலகிற்கு உணர்த்திய மனிதத்தை அழகான இசைகலந்த காதல் கொண்டு சமகாலச் சூழல்களைக் கதை நகர்வாக்கிப் படைக்கப்பட்ட படைப்பே ஜிப்ஸி.

  திரையில் தோன்றும் ஒரு சில காட்சிகள் போதிய அழுத்தம் தரப்படவில்லையோ என நினைவுக்குள் முட்டிமோதும் அடுத்த நொடியே காட்சிப்படுத்தியதில் நமக்குள் ஏற்படும் அழகுணர்ச்சி அதை மறையச் செய்துவிடுகிறது. இக்குறைக்கான காரணம் 50-க்கும் மேற்பட்ட தணிக்கை வெட்டுகளுக்குப் பின்பு படம் வெளிவந்திருப்பது தான்.   குஜராத் கலவர கதாப்பாத்திரங்கள் இன்று அடைந்துள்ள அசுர வளர்ச்சி பற்றிய புரிதல் உள்ள எவரும் இயக்குநர் ராஜு முருகனின் மெனக்கெடலை அற்பமாகக் கருதமாட்டனர். 50 வெட்டுகளைக் கடந்தும் தனது படைப்பின் வழியே இச்சமூகத்திற்குத் தேவையானவற்றைச் சுவைபட சமைத்துப் பரிமாறியிருக்கிறார் ராஜு முருகன்.

  நாடோடிகளின் வாழ்க்கை,
  இசுலாமியர்களின் வாழ்வியல்,
  க(கூ)ட்டுக்குள் இருந்து பறக்க முயலும் பெண்மை,
  அதை ஏற்றுக் கொள்ளும் அன்னை,
  ஆணவக் கொலை செய்யாத சமூகம்,
  கணவனின்றி திரும்பி வரும் பெண்ணை ஏற்கும் தந்தை,
  முத்-’தலாக்’,
  ஒரே நாடு - ஒரே மத கொடூரம்,
  மொழி-இன-மதம் கடந்த வாழ்க்கை,
  காஷ்மீர் தீவிரவாதம்,
  காவி பயங்கரவாதம்,
  காக்கி பயங்கரவாதம்,
  சிவப்பின் (பொதுவுடமை) பார்வை,
 

மத பயங்கர வாதத்தால் உருகுலைந்த மனைவியை மீட்கப் பாடாய்படும் கணவன்,   தான் நாடோடியாயினும் (தேசாந்திரி) தன் மகள் அவ்வாறாகிவிடக்கூடாதென உணரும் தந்தை,   மத தீவிரவாதத்திலிருந்து இழப்புகளோடே மீளும் அடியாளின் மனிதம் குறித்த புரிதல்,   கல்வியின் அவசியம் குறித்த புரிதல்,   அடுத்தடுத்து காலந்தோறும் விடாது தொடர்ந்து கடந்து வரும் மத பயங்கரவாதம்,

  பயங்கரவாதத்திற்கு எதிராக எழும் மக்கள் திரள்,   என்று இன்னும் பலதரப்பட்ட புரிதல்களை ஏற்படுத்த வந்துள்ளான் ஜிப்ஸி!

  உடன் பழகினோரையே (ராணி முகர்ஜி) வன்புணர்வு செய்யும் இசுலாமியக் கதாப்பாத்திரத்தை உருவாக்கி இசுலாமியர் மீதான தேவையற்ற அச்ச உணர்வைப் பற்ற வைத்த ஹேராம் அல்ல இந்த ஜிப்ஸி.   காவி நாமமிட்டவனெல்லாம் காவி பயங்கரவாதி அல்ல என்ற புரிதலை ஆணித்தரமாக அடையாளயப்படுத்தி மனிதம் போற்றியுள்ளான் ஜிப்ஸி.

ராஜு முருகன் போன்றோரின் நாடகக்கலையில் அடிநாதம் உணர்ந்த படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டுமானால், அவர்களின் படைப்பிற்குப் பணமளிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நட்டம் ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது திரைப்படம் பார்ப்போருக்கு மட்டுமல்லாது நாட்டு நலனை நேசிக்கும் மனித நேயர்களுக்கான பொறுப்பு. எனவே பொறுப்புணர்ந்து திரையரங்கில் சென்று பாருங்கள்.

தணிக்கையில் துண்டாடப்பட்ட காட்சிகளில் சில இணையத்தில் வெளியானது. தொடுதிரையில் இதைப் பார்த்துவிட்டு வெள்ளித்திரையில் ஜிப்ஸியைப் பார்க்கச் சென்றால் அவனைத் தடையின்றி புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.