சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவர்கள் சரணடைய ஜூலை 7 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ராஜகோபால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சரணடைய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் மற்றும் அவரது உதவியாளர் ஜனார்த்தனன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணையின் போது, அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் சரணடைவதில் விலக்கு இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டனர். மேலும் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று வட பழனி விஜயா மருத்துவமனையில் இருந்து சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரைப் புகைப்படம் எடுக்க முயன்றநியூஸ் 18 சேனல் செய்தியாளர் வெற்றி மற்றும் ஒளிப்பதிவாளர் மீது மருத்துவமனைக் காவலாளிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது கேமராவும் சேதப்படுத்தி உள்ளனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.