tamilnadu

img

கோவை - பெங்களூர் இரவு நேர ரயில் சேவை பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

தில்லி, மார்ச் 15-  கோவை - பெங்களூர் இரவு நேர ரயில் சேவை வழங்க வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., மக்களவையில் வலியுறுத்தினார். வியாழனன்று (மார்ச் 12) மக்களவையில், ரயில்வே மானிய கோரிக்கை மீது பி.ஆர்.நடராஜன் பேசியதாவது: கோவை பாராளுமன்ற தொகுதியில், மாணவர்கள், வர்த்தகர்கள், பக்தர்களுக்காகவும், சுற்றுலா மையங்களுக்காகவும், பெங்களூருக்கான இரவு நேர ரயில் சேவை மற்றும் கோவை - ராமேஸ்வரம், கோவை - கொல்லம், ரயில் சேவைகளை மீளப் பெறுதல் ஆகிய கோரிக்கைகள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. மேலும் கோவை நகரம் ஸ்மார்ட் சிட்டி என அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால், மக்களுக்கான அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்துதல் என்பது விரைவாக செயல்படுத்த வேண்டிய முக்கியத் தேவையாக உள்ளது. இந்நிலையில், கோவை - பெங்களூரு இடையேயான இரவு நேர ரயில் சேவை வசதி 2007 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. வர்த்தகர்கள், ஐ.டி ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் சாதாரண பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, கடந்த 2007 ஆம் ஆண்டு, அப்போதைய ரயில்வே துறை அமைச்சர், கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் சேவை வசதியை புதிதாக அறிவித்தார். பெங்களூர் மற்றும் கோவைப் பயணிகள் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவழித்து சாலை போக்குவரத்தையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. எனவே, கோவை மற்றும் பெங்களூரு மக்களுக்கு இரவு நேர ரயில் சேவை வசதி என்பது மிக அத்தியாவசியமான தேவையாக உள்ளது. கோவை - ராமேஸ்வரம் ரயில் வழி போத்தனூர், பொள்ளாச்சி, மதுரை எனவும், கோவை - கொல்லம் ரயில் வழி பொள்ளாச்சி, திருநெல்வேலி என ஆகியவை போத்தனூர் - திண்டுக்கல் கேஜ் மாற்றும் பணி துவக்கப்படுவதற்கு முன்பாக, மேற்குறிப்பிட்ட ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை மார்க்கமாக இயக்கப்பட்டன. இந்த வழிப்பாதை, கோவை, நீலகிரி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், வர்த்தக சமூகத்தினருக்கும் குறுகிய தூர வழிப் பாதையாக இருந்தது. இந்த கேஜ் மாற்றும் பணி நிறைவு பெற்ற பின்னர், கோவை - மதுரை ரயில் வழி போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி இயக்கப்பட்ட போதும், மேற்சொன்ன இரண்டு ரயில் சேவைகளும் மக்களின் நலனிற்காக கொண்டுவரப்படவில்லை. இந்த நீட்டிப்பு, ரயில்வே துறைக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் என்பதால் தீவிர கவனம் தேவை.

கோவை - மதுரை புதிய இன்டர் சிட்டி ரயில் சேவை: 
இந்த வழித்தடத்தில், அதிக பிரபலமான கோவில்கள், சுற்றுலா மையங்கள், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, பழங்கள் மொத்த விற்பனை அங்காடி ஆகியவை உள்ளன. கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள், அமைப்புசாரா/அமைப்புசார்ந்த பணியாளர், பக்தர்கள் என எல்லோரும் ரயில் வசதியோடு ஒப்பிடுகையில், கட்டணம் அதிகமான, நேரம் அதிகம் செலவாகின்ற சாலைப் போக்குவரத்தையே சார்ந்திருக்கிறார்கள். எனவே, அவர்களது வசதி, நலனுகேற்ற வகையில், ஒரு பகல் நேர இன்டர் சிட்டி ரயில் சேவை வசதி தேவை. இவ்வசதி, அவர்களது நிதி நிலைமைக்கு ஏற்ற வழியாகவும் எல்லா தென் மாவட்டங்களை இணைக்கும் விதத்திலும் இருக்கும். கோவை - நாகர்கோவில் செல்லும் ரயில் வழி போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மதுரை தமிழ்நாட்டின் வியாபார மற்றும் சுற்றுலா மையமான நாகர்கோவிலுக்கு கோவையிலிருந்து நேரடி ரயில் சேவை இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது, நாகர்கோவிலுக்கு காலை மற்றும் இரவில் கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. கோவை - நாகர்கோவிலுக்கு ஒரு நேரடி ரயிலானது, போத்தனூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை மார்க்கமாக அறிமுகப்படுத்தப்படுமேயானால், அது கோவை, நீலகிரி மாவட்டப் பயணிகளுக்கு, 2 மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரத்தை சேமிக்க உதவும்.

திருப்பூர் - சென்னை புதிய நேரடி ரயில் சேவை வசதி: 
திருப்பூர் நகரமானது உலகத்தினரிடையே, “டாலர் சிட்டி” என அழைக்கப்படுகிறது. கோவையிலிருந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ,மற்றும் ஈரோட்டிலிருந்து செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் போன்று, ஒரு புதிய ரயில் வசதி, திருப்பூரிலிருந்து சென்னைக்கு “ டாலர் சிட்டி” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கோவை - சென்னை - எக்மோர் ரயில் சேவை வழி போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், சேலம்: கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக போத்தனூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், சேலம் மார்க்கமாக கோவையிலிருந்து, சென்னை எக்மோருக்கு குறுகிய பயண வழியாக, எந்த ஒரு நேரடி ரயில் சேவையும் இல்லை. எனவே, கோவையிலிருந்து சென்னை எக்மோருக்கு பொள்ளாச்சி வழியாக மேலும் ஒரு புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும், கோவையில் உபயோகப்படுத்தாமல் வைக்கப்பட்டிருக்கும் ரேக்குகளை கோவை - மதுரை ரயில் சேவைக்கு பயன்படுத்தலாம். சென்னை- கோவை (12680/12679) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய வழக்கமான ரேக்குகள், சமீபத்திய எல்ஹச்பி ரேக்குகளால் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன. எனவே, இந்த வழக்கமான பழைய ரேக்குகளை கோவை, மதுரை புதிய ரயில் சேவைக்கு பயன்படுத்தி இயக்கலாம்.

இருகூரில், ரயில்வே தளத்தை விரிவுபடுத்துதல்: 
இருகூரில் ஒரு ரயில் நிலையம், கேரளா - தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அதில் பொருட்கள் ஸ்டோர் யார்டு செயல்படுகிறது. இந்தப்பகுதி கோவை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின், நடைபாதையின் நீளம், ரயிலின் நீளத்திற்கு போதுமானதாக இல்லாததால், பயணிகள், தங்களது ரயில் சேவை வசதிக்கு பெரிதும் அவதிப்படுகிறார்கள். தினமும் 200 க்கும் மேற்பட்ட பயணிகள், பேருந்தில் பயணம் செய்து வந்து, இந்த ரயிலைப் பிடித்து, தங்களது பணியிடத்திற்கு சென்றடையும் வகையில் தான் உள்ளது. எனவே, நடைபாதையை விரிவு படுத்துவது ஒன்றுதான் இருகூர் மக்களின், தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும். அதனால் இந்த வேலை விரைவாக பரிசீலிக்கப்பட வேண்டும். மேலும், வட கோவை ரயில் நிலையத்தில், இரவு நேர ரயில்களான 1. ரயில் எண்.12083 ( மயிலாடுதுறை - கோவை) 2. ரயில் எண்.22669 (நாகர்கோவில் -கோவை) 3. ரயில் எண்.12675 (சென்னை - கோவை) 4. ரயில் எண்.11013 (மும்பை - கோவை) ஆகிய மேற்குறிப்பிட்ட ரயில்கள் நிற்காமல் சென்றுவிடுகின்றன. இந்த நடவடிக்கையால் ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, காந்திபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதி மக்களுக்கு பெரிய இடையூறாக உள்ளது. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட ரயில் சேவை வசதிகளை எனது கோவை பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு வழங்க பரிசீலிக்க வேண்டும். இதனால் வர்த்தக சமூகத்தினர், வியாபாரிகள், பக்தர்கள், மற்றும் சுற்றுலா மையங்களுக்கு வருவோர் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.