tamilnadu

img

ஃபானிபுயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

ஒடிசா மாநிலத்தில் 1999இல் ஏற்பட்ட சூப்பர் புயலுக்கு அடுத்து தற்போது ஃபானி புயலால் மிகவும் மோசமாக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களான புவனேஷ்வர், பூரி, குர்தா மற்றும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்ட கனாஸ், டாங்கி, சந்தகா முதலான இடங்களையும் மே 9, 10 தேதிகளில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தோழர்கள் விஜுகிருஷ்ணன், ஜனார்தன் பட்டி ஆகியோரும் ஒடிசா விவசாய சங்கத்தன் தலைவர் யம்மேஷ்வர் சமந்தராய், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஜதின் மோகன்டி, பப்பி மகாரானா உட்பட பலரும் சென்று சென்று பார்த்தார்கள். பாதிப்புக்கு உள்ளான மக்களையும் சந்தித்தார்கள். அதனைத்தொடர்ந்து சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அசோக் தாவ்லேயும், பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லாவும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தின் கடற்கரையை ஒட்டியிருந்த வீடுகள், பயிர்கள், மரங்கள் மின்கம்பங்கள் அனைத்தையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அழித்து நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்புயலின் காரணமாக இதுவரையிலும் சுமார் 70 பேர் இறந்துள்ளார்கள். சுமார் 16 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 1 கோடியே 40 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 1 லட்சத்து 52 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விளைந்த நெற்பயிர்கள், தென்னை மரங்கள், முந்திரி மரங்கள், மற்றும் பல்வகையான பயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கால்நடைகளும் பெரிய அளவில் இறந்துள்ளன. மேம்போக்கான மதிப்பீட்டின்படியே மாநிலத்தில் விளைந்த பயிர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் அழிந்துவிட்டது. 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூர அளவிற்கு நிறுத்தப்பட்டிருந்த 1,56,000 மின் கம்பங்கள் சேதமடைந்து மின்விநியோகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. புயல் வீசி ஒரு வாரம் கழிந்தபின்னரும் இப்பகுதிகளில் மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் இன்னமும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஒடிசா பிஜுஜனதா தள அரசாங்கம் புயல் குறித்து எச்சரித்து மக்களை வெளியேற்றியதில் வெற்றி பெற்றிருந்த போதிலும், புயலுக்குப்பின்னர் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உதவிகள் செய்வதிலும் தோல்வி அடைந்திருக்கிறது.

முன்பு ஏற்பட்ட சூப்பர் புயலின்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததுடன் ஒப்பிடும்போது அதில் படிப்பினையைப் பெற்ற ஒடிசா மாநில அரசு புயல் வந்தால் மக்களைக் காப்பாற்றுவரதற்காக அதன்பின்னர் கடந்த இருபதாண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தந்திருப்பதன்காரணமாக இப்போது உயிர்ச்சேதம் மிகவும் திறமையானமுறையில் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் மக்களுக்கும் நிரந்தரமாக அத்தகைய குடியிருப்புகளைக் கட்டித்தர அரசு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

புயலுக்குப்பின்னர் நிவாரணங்கள் அளிப்பதில் மிகவும் மந்தமான போக்கு ஆட்சியாளர்களிடம் இருப்பதற்கு எதிராக, மே 10 அன்று புவனேஷ்வரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கிளர்ச்சிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு இடைக்கால இழப்பீட்டுத்தொகையாக குடும்பத்திற்கு 2000 ரூபாயும், 50 கிலோ அரிசியும் பாலிதீன் படுக்கைவிரிப்பு ஒன்றும் அளிப்பது என்கிற முடிவு இன்னமும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்குப் போய்ச்சேரவில்லை. இவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கிளர்ச்சியின்போது வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அலி கிஷோர் பட்நாயக், அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன், மூத்த தலைவரான ஜனார்தன் பட்டி முதலானோர் உரையாற்றினார்கள். கூட்டத்தின் நிறைவாக ஒரு கோரிக்கை மனு தயாரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

புயலின் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்களுக்கும், உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள பின்னணியில் அவர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மிகவும் கூருணர்ச்சியுடன் கையாள வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் மற்றும் புனர்நிர்மாண உதவிகள் பின்வருமாறு:

·         பூரி மற்றும் குர்தா ஆகிய பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவைகளாக இருப்பதால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் 50 கிலோ அரிசி, 2000 ரூபாய் ரொக்கம், மற்றும் பாலிதீன் படுக்கை விரிப்பு வழங்கப்படும்.

·         கட்டாக், கேந்திரபடா மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டங்கள் மிதமான அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், இங்குள்ள குடும்பத்தினருக்கு 500 ரூபாய் ரொக்கமும், ஒரு மாதத்திற்கான அரிசியும் வழங்கப்படும்.

·         பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாதம் கூடுதலாக ஓய்வூதியம் அளிக்கப்படும்.

·         முழுமையாக பாதிப்புக்கு உள்ளான கட்டிடங்களுக்கு வீடுகட்டுவதற்கான உதவித்தொகை 95 ஆயிரம் ரூபாயும், பகுதியளவு பாதிப்புக்கு உள்ளான கட்டிடங்களுக்கு 5,200 ரூபாயும், சிறிய அளவில் பாதிப்புக்கு உள்ளான கட்டிடங்களுக்கு 3,200 ரூபாயும் அளிக்கப்படும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்க்கண்டவாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

·         நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். நிலைமையைச் சமாளித்திட மத்திய அரசு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கிட வேண்டும்.

·         மின்விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும்.

·         பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பத்தினருக்கும் உடனடி நிவாரண உதவி 2000 ரூபாய் என்பதை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்திட வேண்டும்.

·         ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது இரண்டு பாலிதீன் படுக்கை விரிப்புகள் வழங்கிட வேண்டும்.

·         பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினருககு தலா ஒரு குவிண்டால் அரிசியும், பத்து கிலோ கிராம் பருப்பும் வழங்கிட வேண்டும்.

·         பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிரந்தர வீட்டுவசதி செய்துதரப்படும்வரை அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்.

·         மறுகட்டுமானப் பணிகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களையும், இளைஞர்களையும் ஈடுபடுத்திட வேண்டும். அவர்களுக்கு நாள்தோறும் ஊதியமாக குறைந்தபட்சம் 600 ரூபாய் வழங்கிட வேண்டும்.

·         வீடிந்த அனைவருக்கும் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் அளித்து அவர்கள் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொள்ள ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

·         நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கிட வேண்டும். ஹெக்டேருக்கு 125 கிலோகிராம் இலவச விதைகள் வழங்கிட வேண்டும். தென்னங்கன்றுகள், முந்திரி செடிகள் இலவசமாக அளித்திட வேண்டும். கடன் திருப்பித்தருவதற்கான கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டும். வட்டியில்லாக் கடன் அளித்திட வேண்டும்.

·         இறந்தவரின் வாரிசுக்குக் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அளித்திட வேண்டும்.

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது. மேலும் அனைத்துக் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளும் பாதிப்புகளைத் துல்லியமாக மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும் அகில இந்திய விவசாயிகசள் சங்கத்தின் அனைத்து மாநில, மாவட்ட, வட்ட, வட்டாரக் கிளைகளும் மற்றும் தனிநபர்களும் பாதிப்புக்கு உள்ளான ஒடிசா மக்களுக்குத் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நிவாரண நிதியை அளிக்க விரும்புவோர் ஒடிசா விவசாய சங்கத்திற்கு, கீழ்க்கண்ட வங்கி எண்ணுக்கு அனுப்பிட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

வங்கியின் கணக்கு எண் மற்றும் முகவரி:

ORISSA KRUSHAK SABHA,                            

ACCOUNT NO: 27650100000678,

IFSC: BARBOSAVNAY MICR Code: 751012004,                                        BANK OF BARODA,

Branch Name: PFS NAYAPALLI, BHUBANESWAR

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

(ந.நி.)