சென்னை, ஆக.3- தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மக்கள் 80 ஆண்டு களாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக தங்களது உணர்வை, பல காலகட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப் படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டம் 3ஆவது பிரி வில் இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களில் மத்திய அரசானது ஆங்கில மொழியில்தான் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இருந்தும் 1965ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு இந்தியை அலுவல் மொழியாக மாற்ற நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து மாணவர்களும், மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங் களை தீவிரமாக நடத்தினர். மக்களிடைய மும்மொழிக் கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1968 ஜனவரி 23ஆம் தேதி “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு மட்டும் இடமளித்து தீர்மானம் எடுத்து நிறைவேற்றினார். அதன்படி தமிழ்நாட்டில் இந்தி மொழிப் பாட திட்டத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது. அப்படி அண்ணா தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல் படுத்துவதுதான் மறைந்த முத லமைச்சர் எம்ஜிஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது.
அதன்படியே, அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது 1986ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறை வேற்றினர். அதேபோல் “இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி யை திணிக்கக் கூடாது என்பதிலும், அதற்கான முயற்சியை எதிர்த்து முறி யடிப்பதிலும் உறுதியாக உள் ளோம்” என மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவும் சூளுரைத்தார். மேலும் இந்தியாவில் தமிழ் மொழி யை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். அவர்கள் வழி வந்த தமிழ்நாடு அரசும், மத்திய அரசு வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, மும்மொழிக் கொள்கை இடம்பெற்றதை சுட்டிக் காட்டி அதனை தீவிரமாக எதிர்த்தது. தமிழ் நாட்டை பொறுத்தமட்டில் இரு மொழிக் கொள்கையையே கடை பிடிப்போம் என உறுதிபட வலி யுறுத்தி 2019ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன்.
அதேபோல இரு மொழிக் கொள்கையையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்தாண்டு சுதந்திர தின உரையிலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பல்வேறு விவாதங் களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். எனவே மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும் மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும் அம்மாவின் (அதிமுக) அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக் காது. இருமொழி கல்விக் கொள்கை யை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர்.
வேதனையும் வருத்தமும்...
இந்த சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனை யையும், வருத்தத்தையும் அளிக் கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் ஏற்று மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனவே அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப மும் மொழிக்கொள்கையை செயல் படுத்திக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர் களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு தான் தமிழ்நாடு அரசு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்
முதல்வருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கடிதம்
சென்னை, ஆக. 3 மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும், அதனைச் செயல்படுத்திட மறுக்க வேண்டுமெனவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் திங்களன்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் எதிராகவும், தமிழ்நாட்டில் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கல்வித் திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலும் அமைந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு அனைத்துக் கட்சிகளும், எவ்வித மறு சிந்தனையுமின்றி, கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொரோனா பேரிடர் இந்திய மக்களை வாட்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தேசத்தின் இறுக்கமான இந்த வேளையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்ப தில் இருந்தே, அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம். 2016-ல் தொடங்கி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு, கஸ்தூரிரங்கன் குழு என்றெல்லாம் அமைத்து உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை, கல்வியில் மதச்சாயம் பூசி, வணிகமயப்படுத்தி, சமஸ்கிருதம், இந்திக்கு முக்கியத்துவம் அளித்து, கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி, பெண்ணுரிமை, சமத்துவம், சம வாய்ப்பு, பன்முகத்தன்மை ஆகிய அனைத்திற்கும் விரோதமாக அமைந்திருக்கிறது. 66 பக்கங்கள் கொண்ட தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முகவுரை யின் பக்கம் 5-ல் ‘கற்பித்தலிலும், கற்பதிலும் பன்மொழியையும், மொழித் திறனையும் ஊக்குவிப்பதுதான் கல்விக் கொள்கையின் அடிப்படைத் தத்துவம்’ என்று கூறியிருப்பதற்கு மாறாக, மீதியுள்ள அனைத்துப் பக்கங்களிலும் நம் தமிழ்மொழிக்கு எதிரான எண்ணவோட்டமே பிரதிபலிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
உதாரணமாக:-
1. பத்தி 4.11-ல், ‘எங்கெல்லாம் முடிகிறதோ’ (Wherever possible) ஐந்தாம் வகுப்பு வரையாவது பயிற்றுமொழி தாய்மொழியாக இருக்க வேண்டும்’ என்பதும், ‘முடிந்தால் 8-ஆம் வகுப்பு வரையிலும் தொடரலாம்’ என்பதும் மத்திய அரசுக்கு மும்மொழித் திட்டத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது.
2. அதே பத்தியில், ‘ஒரு மொழியைக் கற்பிக்கவும், கற்றுக் கொள்ளவும் அந்த மொழி பயிற்றுமொழியாக இருக்க வேண்டியதில்லை’ என்று கூறுவதிலிருந்து, எப்பாடு பட்டாவது இந்தி மொழியை தமிழகத்தில் திணித்து விட வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்படுவதாகவே தெரிகிறது.
3. ‘மூன்று மொழித்திட்டத்தை நிறைவேற்ற மற்ற மாநிலங்களில் இருந்து ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்’ என்று பத்தி 4.12-ல் அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
4. பத்தி 4.13-ல், ‘மூன்று மொழித்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணாவால் 1968-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இருமொழிக் கொள்கைக்கும், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு, நடைமுறையில் உள்ள 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது.
5. பத்தி 4.17-ல், ‘பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டங்களிலும் அறிவைப் பெற மிக முக்கியமானதாகக் கருதி சமஸ்கிருதம் கற்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக சமஸ்கிருதத்திற்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’ என்பது, இருமொழிக் கொள்கையை அடியோடு புறக்கணித்து, சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டில் திணிக்கும் பகிரங்க முயற்சியாகும்.
6. ஆனால், தமிழக மக்கள் அதிர்ச்சியடையும் வகையில், அடுத்த பத்தி 4.18-ல், ‘தமிழ் இலக்கியத்தைப் பாதுகாத்து வைக்கலாம்; இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு நாளைய தலைமுறை அந்த மொழி பற்றி பிற்காலத்தில் அறிவு பெற உதவும்’ என்று கூறியிருப்பது தமிழ் மொழியை தமிழர்களை ஏன், தமிழ்நாட்டையே நாக்கில் தேன் தடவி ஏமாற்றும் அடாவடிச் செயல்.
செம்மொழியாம் தமிழ் மொழியை, தேசிய கல்விக் கொள்கையில் இவ்வாறு சிறுமைப்படுத்தி, சமஸ்கிருதத்தைத் திணித்திடும் உள்நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடை முறையில் இருந்து வரும் கல்வி முறையைச் சிதைத்து பின்னடைவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. அதில் மேலும் தமிழகக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவற்றுள்:
1. கல்வியில் வேத கலாச்சாரத்தைத் திணிப்பது,
2. இட ஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லாமல் சமூக நீதியைப் புறக்கணிப்பது,
3. பெண் கல்வி குறித்து கவலைப்படாது பெண்ணுரிமையைக் காவு கொடுத்திருப்பது,
4. மூன்று வயதுக் குழந்தையை முறைசார்ந்த பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் உரிமையைப் பறிப்பது,
5. தொழிற்கல்வி என்ற பெயரால், தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்னரே தோல்வி கண்ட குலக் கல்வியை மீண்டும் அமல்படுத்துவது,
6. மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாற்றியமைப்பது,
7. மாநில அளவில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு,
8. 10+2 என்று இருக்கின்ற வெற்றிகரமான ‘பிளஸ் 2 கல்வி முறையை 5+3+3+4 என்று மாற்றியமைப்பது,
9. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு,
10. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் விதத்திலும் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதத்திலும் உயர் கல்வியை வகுத்திருப்பது.
11. தன்னாட்சியுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; ஆகியவற்றை இப்போது அலட்சியப்படுத்தி னால், எதிர்காலத் தமிழ்ச் சமூகம் தரம் தாழ்ந்து வீழ்ந்து விடும்.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்த, தேசிய கல்விக் கொள்கை-2020 தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக நடைபெற்று வரும் கல்வி முறைக்குச் சற்றும் பொருந்தாத, நமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு விரோதமான மும்மொழித் திட்டத்தைத் திணிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆகவே, தமிழக மக்களின் நலனுக்கும் மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான வருங்காலத் தலைமுறைக்கும் பண்பட்ட நமது பன்முகக் கலாச்சாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழக மாணவர் சமுதாயத்தை - காவிமயக் கல்வியின் பக்கமும், பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் திசை திருப்பும் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்றும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தமிழ்க் கற்றல் சட்டம் 2006 ஆகியவையே தொடரும் என்றும் பகிரங்கமாக அறிவித்து அது தொடர்பாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் மு.க.ஸ்டாலின் (திமுக) கி.வீரமணி (திராவிடர் கழகம்), கே.எஸ்.அழகிரி, ( காங்கிரஸ்), வைகோ (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.எம்.காதர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்கு மக்கள் தேசியக் கட்சி) ரவி பச்சமுத்து (இந்திய ஜனநாயகக் கட்சி) ஆகிய தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.