வயது வித்தியாசமின்றி கோடையில் அனைவரும் உண்ணும் பொருள் ஐஸ்கிரீம். இவ்வாறு மக்கள் தேடிவிரும்பி உண்ணும் உணவுப்பொருளான ஐஸ்கிரீம், தற்போதைய கொரோனா ஊரடங்கால் பெரும்பாலும் காணாமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பேரிடர்கால ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல தொழில்களில் ஐஸ்கிரீம் உற்பத்தியும் ஒன்றாகும். வழக்கமாக பிப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையிலான கோடை கால மாதத்தில் மட்டும் ஆண்டின் 60 சதவித வருவாயை ஐஸ்கிரீம் உற்பத்தித் துறை எட்டும். ஆனால், கொரோனா ஊரடங்கால் தற்போது ஏறத்தாழ அமைப்புசார் உற்பத்தித் துறையில் ரூ.15 ஆயிரம் கோடியும், அமைப்புசாரா உற்பத்தித் துறையில் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பானது பெரிய அளவில் விற்பனை செய்பவர்களைத் தாண்டி உள்ளூர்களில் விற்பனை செய்யும் சிறு உற்பத்தியாளர்களை அதிகமாக பாதித்துள்ளது. அவ்வாறு கோவையில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் சிலரிடம் பேசுகையில்,
சுயநலமிக்க அரசுகள்
கோவையில் 8 வருடங்களாக லிவிங் ஐஸ்கிரீம்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்திவரும் சந்தான கிருஷ்ணன் என்பவர் கூறுகையில், 2012 –ல் படிப்பை முடித்தபின் தனியாகத் தான் இத்தொழிலை ஆரம்பித்தேன். ரூ.6 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சிறப்பாகவே நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆனால், பொதுமுடக்கம் ஆரம்பித் ததிலிருந்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டேன். நான் பிரத் யோகமாக திருமணம் போன்ற விழாக்களுக்கு தான் ஐஸ்கீரிம் செய்து கொடுத்து வருகிறேன். தற் போது பொது முடக்கத்தால் விழாக்கள் அனைத்தும் நிறுத்தப் பட்டதால் தற்போது வெறும் நூறு பேருக்கான ஆர்டர்களை வெளியூரில் நஷ்டத்திற்கு செய்து கொடுத்து வருகிறேன். இதற்கிடையே, மின்கட்டணம் உயர்வு எங்கள் போன்றோரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் முன்புபோல் எதுவும் முழுமையாக பயன்படுத்தாதபோதும் ரூ.63 ஆயிரம் வரை மின்கட்டணம் வந்துள்ளது. மற்றுமொரு முக்கியப் பிரச்சனை பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து வர வேண்டிய ஐஸ்கிரீம் சுவையூட்டிகள் மற்றும் சில மூலப்பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடக்கம் நிலையே தொடருமேயானால் திரும ணத்தை மட்டும் நம்பிப் பிழைக்கும் எங்களைப் போன்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அரசைப் பொறுத்தவரை எங்களுக்கென எந்தவொரு நிவாரணமும் அளிப்பதில்லை. கடன் கொடுக்கிறோம் என்ற அரசின் அறிவிப்பிலும் புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கு எவ்வித பயனும் சென்றடையவில்லை. ஆக புதுக்கடனாளாகிய நாங்கள் எங்கு சென்று என்ன செய்வது? ஆகவே, குறைந்தபட்சம் மின்கட்டணத்தையாவது நிச்சயமாக ரத்து செய்ய வேண்டும். மேலும் கடன் தவணைகளை திருமண சீசன் துவங்கும் வரை எங்களைப் போன்றோருக்கு நிறுத்தி வைக்க வேண்டும். இத்தனை வருடங்களாக வருமானவரி, ஜி.எஸ்.டியினை லட்சக்கணக்கில் சரியாகக் கட்டிக் கொண்டிருக்கும் எங்களுக்கு அரசு தற்போது கூட எந்தவொரு சலுகையும் அறிவிக்காமல் இருப்பது சுயநலத்தின் உச்சமாகப் பார்க்க வேண்டியுள்ளது. இதையெல்லாம் அரசு தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
களையிழந்த திருமண ஆர்டர்கள்...
எம்.பி.ஆர் எனும் ஐஸ்கிரீம் நிறுவனத்தை நடத்தி வரும் ரமேஷ் என்பவர் கூறுகையில், நான் கோவை ஆவாரம்பாளையத்தில் 10 வருடங்களாக நிறுவனம் வைத்து ஐஸ்கிரீம் தயாரித்து விற்று வருகிறேன். நண்பர் ஒருவருடன் பார்ட்னராக துவங்கிய சமயத்தில் ஆரம்பத்தில் செயல்பட மிக கஷ்டமாக இருந்தாலும், போகப்போக தொழில் நன்றாகவே செல்ல ஆரம்பித்தது. ஆனால், இதுவரை நாங்கள் எதிர்கொள்ளா ஒரு பிரச்சனையை கொரோனா என்னும் பெயரில் தற்போது எதிர் கொண்டு வருகிறோம். இருப்பினும் இது எங் களுக்கு மட்டும் பாதிப்பல்ல, அனைவரின் வாழ்வாதாரத்தையும் இது கேள்விக்குறியாக்கி இருப்பதால், இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
நாங்கள் கல்யாணம் போன்ற சுபவிழாக்களில் மட்டுமே பிரத்யேகமாக ஆர்டர்களை பெற்று ஐஸ்கீரிம்களை மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம். இதன்படி எங்களுக்கு மாதத்திற்கு 56-60 ஆர்டர்கள் வரும். ஆனால், தற்போது சுமார் 4 மாதங்களாக அந்நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வீடுகளிலேயே நடத்தப்படுவதால் நாங்கள் பூஜ்ஜியம் விற்பனையில் உள்ளோம். தற்போது எப்போதாவது ஒன்றிரண்டு ஆர்டர்கள் வருகிறது. அதுவும் கூட நஷ்டத்தில் தான் அளித்து வருகிறோம். ஆக கொரோனா முழுமையாக நின்றபின் எப்போது திருமணங்கள் எல்லாம் பழையபடி நடக்க ஆரம்பிக்குமோ, அப்போது தான் எங்களுக்கு வருமானம். சம்பாதித்த போது ஒரு சுயதொழில் செய்பவராக அதை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டது போல் தற்போதும் இப்பேரிடர் கால நிலையினையும் எதிர்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்கொள்ளா பேரிடர்
மில்கிமேன் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ள கணேஷ் குமார் என்பவர் கூறுகையில், தற்போதைய பேரிடர்கால நிலை போல் இதற்குமுன் நாங்கள் எச்சூழ்நிலை யிலும் இருந்த தில்லை. முன்பெல் லாம் வரு டந்தோறும் பிப்ரவரி முதல் ஜுன் வரையிலான கோடை காலங்களில் விற்பனை மிக அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது மிகக்கடுமையான சூழலில் உள்ளோம். அதுவும் சரியாக கோடை காலத்தில் இந்த கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவ் வருடத்தின் பெரும் பான்மை வருமானமே தற்போது கேள்விக் குறியாகி உள்ளது. நாங்கள் திருமண ஆர்டர்கள் மட்டுமின்றி பலதரப்பட்ட கடைகளிலும் ஒட்டு மொத்தமாக விற்று வருகிறோம். மேலும் இங்கு தயாரித்து மாநி லத்தில் எங்கு ஆர்டர்கள் கேட்கப் பட்டாலும் எவ்வித சிரமமுமின்றி கொடுத்துவிட்டு வருவோம். ஆனால் தற்போதைய ஊரடங்கால் போக்குவரத்து மட்டுமல்ல பிரச்சனை, மக்களின் நுகர்வுத் திறனும் குறைந்துள்ளதால் மக்களிடம் விற்பதற்கே தற்போது சிரமப்பட்டு வருகிறோம். இம்மாதிரியான நேரங்களில் உதவ வேண்டிய அரசும் எங்களுக்கென எந்த விதமான மானியத்தையும் அளிக்கவில்லை. ஆக அரசு முன்வந்து எங்களைப் போன்றோருக்கு ஒவ்வொரு பணியாளருக்கும் குறிப்பிட்ட நிவாரண உதவியினை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொகுப்பு – ச.காவியா