மார்ச் 8- உலக மகளிர் தினம். உலகம் முழுவதும் தங்களின் உரிமை களை மீட்டெடுக்க, உறுதி செய்யப் போராடும் பெண்களின் போராட்டத் திருநாள் இது. பெண்கள் மட்டுமல்ல, பெண்கள் முன்னேற்றத்தில், சமத்து வத்தில் நம்பிக்கை கொண்ட ஆண்களும் இக் கொண்டாட்டத்தில் இணைந்து நிற்பதை காண முடியும். கார்ப்பரேட் முதலாளிகளின் சந்தைக்கான, விற்பனையை அதிகரிக்கும் வகையில் இத்தினத்தை துணிக் கடை, நகைக் கடை முதல் அனைத்து வியாபாரிகளும் இதை கையாளுவதை காண முடியும். வணிகர்களின் விளம்பரக் கூச்சலில் மயங்கி, புடவைக்கும், நகைக்கும் பெண்கள் விருப்பத்துடன் கடைகளில் திரளுவதை நாம் காணமுடியும்.
கேள்விக் குறியாகும் சமத்துவம்
உலக பெண்கள் தினத்திற்கென ஒரு வரலாறு உண்டு. அதை பெரும்பகுதி பெண்கள் இன்னும் அறியாததால் இந்நிலைமையை தங்களுக்குச் சாதகமாக வியாபாரத்திற்கு முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வரலாற்றை அறியாமல் பெண்கள் இருக்கும் வரை பெண் விடுதலை என்பது வெறும் முழக்கமாகவே நீடிக்கும். பெண்களின் நிலைமை குறித்து 135 ஆண்டுகளுக்கு முன்பே காரல் மார்க்ஸ் எழுதிய குறிப்புகளைக் கொண்டு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய புத்தகம், பெண்ணுக்கான சம உரிமைகளும், அவளின் நிலைமைகளும் எப்படி அவளிடமிருந்து படிப்படியாக பறிக்கப்பட்டது என்பதைப் பற்றி பேசுகிறது.
பெண்களுக்கு அதிக நேர வேலை, ஆண்களை விட, பசியைக் கூட போக்கிக் கொள்ள முடியாத கூலி என்பதே முதலாளிகளின் அன்றைய நிலைப்பாடு. வேலையிடங்களில் உழைப்பது தவிர, குடும்ப வாழ்விலும், கூடுதலாக வீட்டு வேலைகள் அனைத்தும் அவள் தலையில். முரட்டுக் கணவர்களை சகித்துக் கொள்வது, பிறரைச் சார்ந்து மட்டுமே வாழ வேண்டிய நிலை, துன்பம், விரக்தி இவைகளே அவள் கண்டது. இந் நிலையில் இன்றும் பெரிய மாற்றம் ஒன்றும் பெரும் பாலான பெண்கள் வாழ்வில் இல்லை என்பதே நடைமுறை உண்மை. நவீன உலகிலும் ஆண் - பெண் சமத்துவம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
போராடக்கூடாது என்பதற்காக...
இன்று நம் நாட்டில் உள்ளது முதலாளித்துவ சமூக அமைப்பு ஆகும். அது பெண்களை சுமையாக, பொம்மையாக, போகப் பொருளாக பார்க்கிறது. பெண் கருக்கொலை, பெண் குழந்தை பிறந்தவுடன் கொல்வது, இளவயது திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்யும் பெண்களை ஆணவக் கொலை செய்தல், மணக்கொடைக் (வரதட்சணை) கொலை, ஒருதலைக் காதல் கொலை, பாலியல் வன்கொடுமை ஆகிய கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன ; அதிகரித்துள்ளன.
கூடுதல் வேலை குறைந்த கூலி
குடும்பத்தில், பொது இடங்களில், பணியி டங்களில் வன்முறை என்பதே பெண்கள் இன்று எதிர்கொள்ளும் சவால் ஆகும். போராடத் துணிந்த பெண்களைக் கொண்ட இயக்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் எதிர்த்துப் போராடிய தால், பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் சட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதே கசப்பான உண்மை. அந்த சட்டங்களை அமல் படுத்தவே போராட்டங்கள் நடத்த வேண்டி யுள்ளது. கூடுதல் வேலை; குறைந்த கூலி என பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.
நிலவும் வேலை இல்லா திண்டாட்டம், வேலைகளை பறிக்கும் அரசின் கொள்கைகள், குடும்பச் சூழல்கள் ஆகியன பெண்களை, குறைந்த கூலியாக இருந்தாலும் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கின்றன. உடலுழைப்பு தொழிலாளர் குடும்பங்களில் மட்டுமல்ல, நடுத்தர வீட்டு குடும்பங்களிலும் கூட குறைந்த கூலிக்கு பெண்கள் வேலை செய்வது அதிகரித்து வருகிறது. பல குடும்பங்களில், ஆண்களுக்கு இருந்த வேலை பறிபோன நிலையில், பெண்களே குடும்பத்தை நடத்த வேண்டி யுள்ளது. சாதாரண ஏழைக் குடும்பங்களில் 75% பெண்களால்தான், அவர்கள் பெறும் சம்பளத்தைக் கொண்டே அன்றாடம், குடும்பம் நடைபெறுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
பணியிடத்தில் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை, வீட்டு வேலைச் சுமைகள், குழந்தைகள் பராமரிப்பு, அதிலும் பெண் குழந்தை களிருந்தால், அவர்களை பராமரிப்பது என எல்லாம் பெண்களின் கடமைகளாக உள்ளன. திருநங்கைகளாகவோ, திருநம்பிகளாகவோ குழந்தைகள் இருந்து விட்டால் அவள் பாடு சொல்லி முடியாது. நடைமுறையில் இதற்கான காரணம் குறித்து சிந்திக்கும் ஆற்றல் பெண்களுக்கு இல்லை.
குடிநீர் வழங்குவது அரசின் கடமை. குடிநீர் வழங்கப்படாவிட்டால் போராடுவதற்கு பதில் கடன் உடன் வாங்கி யாவது ஆழ்துளை கிணறு அமைக்க வரவுக்கு மீறிச் செலவு செய்வது, இல்லையென்றால் சமைக்க, குடிக்க, குளிக்க, புழங்க பலவகையாகச் செலவு செய்து காசுக்கு தண்ணீர் வாங்குவது என்றே பெண்களின் சிந்தனை உள்ளது. இது போல் இருக்கும் பொருள்களையோ, கொஞ்ச நஞ்ச சொத்துக்களை விற்றோ, கடன்பட்டோ, மணக்கொடை (வரதட்சணை) கொடுத்து, பெண்ணை கன்னிகாதானம் ( பெண்ணையே பொருளைப் போல் கொடையளிப்பது) என்ற பெயரில் திருமணம் நடத்தி வைப்பதை சொல்லலாம். பெண் பூப்பெய்துவது முதல் புதுமணை புகு விழா வரை எல்லாவற்றிலும், எப்படியாவது பிரச்சனையை முடித்துக் கொள்வது என்பதே இன்றைய நிலை. போராட்டம் இல்லாமல் எப்படியாவது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது என்ற கருத்து மேலோங்கிய நிலையிலேயே பெண்களில் பெரும் பகுதி இருக்கிறார்கள்.
கருத்துத் திணிப்புகள்
பெண்கள் மீதான வன்முறை அதிகரித் துள்ளதை காரணம் காட்டி, பெண்குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கச் சொல்கி றார்கள். இது ஏற்கனவே உள்ள பெண் கருக் கொலையை, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்படுவதை மேலும் அதிகரிக்கிறது. ஒருபுறம் வன்முறையை காரணம் காட்டி பெண்களை வீட்டில் முடக்குகிறார்கள், மறுபுறம் மதத்தலைவர்கள் சிலரும், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்று மதத்தையும் புராணத்தையும் கடவுளையும் முன்னிறுத்தி கருத்தை சொல்கிறார்கள்.
வெள்ளையர்களை எதிர்த்த விடுதலைப் போராட்ட காலத்தில், சமூகத்தின் பொதுவான முன்னேற்றத்திற்கும், பெண்களின் முன்னேற் றத்திற்கும் கணிசமாக பங்காற்றிய பத்திரிகை களில் பெரும்பான்மையானவை இன்று பெருமளவு பெண்களுக்கு எதிரான கருத்துக் களை பரப்புவதாக உள்ளது கவலைக்குரியது ஆகும். பெண்கள் அணியும் ஆடைகள்தான் பாலியல் வன்முறை உட்பட அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் காரணம் என்று அறிவுக்கு பொருந்தாத செய்திகளை வெளியிடும் அளவுக்கு அவை உள்ளன. திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் முழுவதும், பெண்களை ஒருபுறம் குடும்பத் திற்காக, அதாவது கணவனுக்காக, மகன்க ளுக்காக எவ்வித தியாகமும் செய்ய தயா ராக இருப்பவர்களாக சித்தரிக்கும் அதே நேரத்தில், கொலை மனம் படைத்த கொடூர மானவர்களாகவும், பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்றும் காட்டுகின்றன.
கோயில், பக்தி, விளக்கு பூஜை என்று தொடங்கியே ஆர்.எஸ்.எஸ்.சின் பல்வேறு பிரிவுகளும், அதன் அரசியல் கட்சியுமான பிஜேபியும் இந்து மதவெறியை குறிப்பாக பெண்கள் மத்தியில் வட இந்தியாவில் பரப்ப முடிந்துள்ளது. இங்கும் முனைந்திருக்கின்றன. இந்து, முஸ்லீம் என அனைத்து இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், இருப்புக்குமே ஆபத்தான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான அமைதிப் போராட்டத் திற்கெதிராக, தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் தொடங்கி, அன்மையில் நடந்த கிழக்கு தில்லி கலவரங்களில் மதவெறிக்கு இரையான பெண்களும் பங்கேற்றது ஒரு எச்சரிக்கை ஆகும். பெண்ணுரிமைப் போராட்டங் களை முன்னெடுப்பதோடு, பெண்களை மதவெறிக் கெதிரான போராட்டங்களில் திரட்டி நமது நாட்டை, வாழ்க்கையை, பாதுகாப்பது இன்று நம் முன் உள்ள உடனடிக் கடமையாகும். வரலாறு நெடுகிலும் பெண்கள் இந்த நாட்டை காத்து வந்திருக்கிறார்கள். இயல்பாகவே, அன்பும், கருணையும், மனிதநேயமும் மிக்கவர்கள் பெண்களே! நீதிக்கும், உண்மைக்குமான போராட்டங் களில் அவர்கள் உறுதியுடன் முன்னேறுவார்கள்
இந்த மார்ச் 8-ல் அந்தத் திசையில் பெண்களை அணிதிரட்ட உறுதியேற்போம்!!!
கட்டுரையாளர் : செயலாளர், சிபிஎம், வேளச்சேரி பகுதிக் குழு, தென்சென்னை.