மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் நுகர்வோர் குறியீட்டு எண் (விவசாயத் தொழிலாளர்கள்) இணைக்க உள்ளதாகவும் இது கடந்த 30 ஆண்டுகளாக உயர்வு இல்லாமல் உள்ளதாகவும், தற்போது ரூ.178 தினக்கூலி அளிப்பதாகவும் இந்து தமிழ், அக்டோபர் 1-2019ல் குறிப்பிட்டுள்ளது. தற்போது ரூ.229 தினக்கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கூலி நிர்ணயம் செய்ய நுகர்வோர் குறியீட்டு எண் (விவசாயத் தொழிலாளர்) தான் அளவு கோலாக மத்திய அரசு வைத்துள்ளது.
2006ல் 100 நாள் வேலை அமலுக்கு வந்த பிறகு கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத தொழில்களில் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. வாழ்விற்கான வேலை தேடி வெளியிடங்களுக்கு குடி பெயர்வது அதிகரித்துள்ளது. குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டுமானத்துறை ஓரளவு வேலை வாய்ப்பை அளித்தது. 2005க்கு 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 1 கோடியே 89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தது. அது 2012-18ல் 16 லட்சமாக குறைந்து தேக்கநிலையில் உள்ளது. வருமானம் இல்லாததால் நுகர்வும் குறைந்துள்ளது. நுகர்வுப் பொருட்களில் வளர்ச்சி 2018ஜூலை, செப்டம்பர் மாதங்களில் 16.5 சதவீதமாக இருந்தது. 2019 ஏப்ரல் ஜூன் மாதங்களில் 10 சதவீதமாக குறைந்துள்ளது. நுகர்வு குறைவானது பொருளாதாரத்தில், உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தேசிய சமூக உதவி திட்டங்களான இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியம், இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியம், தேசிய குடும்ப நல உதவி திட்டம் போன்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2017-18ல் ரூ.8694.22 கோடியிலிருந்து 2019-20ல் ரூ.8200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைக்கு 2017-18ல் ரூ.55166.64 கோடி செலவிடப்பட்டது. 2018-19ல் ரூ.61084.09 கோடி செலவானது. ஆனால் 2019-20ல் ரூ.60000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சராசரியாக குடும்பத்திற்கு கிடைத்த வேலை நாட்கள் 2015-16ல் 61 நாள் 2016-17ல் 63 நாள், 2017-18 ல் 41 நாள், 2018-19ல் 46 நாள் மட்டுமே. ஏறிவரும் விலை வாசிக்கேற்ப சம்பளமும் உயரவில்லை வேலைக்கான ஒதுக்கீட்டுத் தொகையும் உயரவில்லை. மத்திய அரசு நியமித்த அனுப்சத்பதி கமிட்டி ரிப்போர்ட் படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.375 அளிக்கப்பட வேண்டும். மேலும் மத்திய அரசு நியமித்த பல குழுக்களும் மத்திய வேலை உறுதி குழுமம் அளித்த பரிந்துரையில் நுகர்வோர் குறியீட்டு எண் (கிராமப்புறம்)என்பதை கணக்கிலெடுத்து கூலியை தீர்மானிக்க வேண்டும் என்றது. எனவே கிராமப்புற மக்களின் வாழ்வினை காப்பாற்றிட.
1.100 நாள் என்பதை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும். 2.நுகர்வோர் குறியீட்டு எண் (கிராமப்பு றம்) என்ற அடிப்படையில் கணக்கீட்டு கூலியை தீர்மானிக்க வேண்டும். 3.வேலை நேரம் 8 மணி நேரம் (ஒரு மணி நேரம்ஓய்வுடன்) என்று இருப்பதை 6 மணி நேரம் என குறைக்க வேண்டும். 4.வாராவாரம் தொழிலாளர்களுக்கு சம்பள சீட்டு வழங்க வேண்டும். 5.வேலைத்தள வசதிகள் அளிக்கப்பட வேண்டும். 6.விபத்தில் மரணம் அடைந்தால் பீமா யோஜனா திட்டப்படி ரூ.30000 தருவதற்கு பதில் குறைந்தபட்சம் ரூ.2லட்சம் நட்ட ஈடு அளிக்க வேண்டும்.