புதுதில்லி:
ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 84 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு விழிப்புணர்வு அமைப்பான ஏடிஆர் நடத்திய ஆய்வில் இதுபற்றி கூறப்பட்டிருப்பதாவது:ஹரியானாவில் கடந்த 2014-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்.எல்.ஏ.க்களில் 75 பேர் ரூ. 1 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்தார்கள். தற்போது அந்த எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 84 கோடீஸ்வரர்கள் எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற்றுள்ளனர்.84 எம்எல்ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 18 கோடியே 29 லட்சமாக உள்ளது. இது 2014-ஆம் ஆண்டில் ரூ. 12 கோடியே 99 லட்சமாக இருந்துள்ளது. தற்போதுள்ள 40 பாஜக எம்எல்ஏ-க்களில் 37 பேரும், 31 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 29 பேரும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் கோடீஸ்வரர்கள். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 25 கோடியே 26 லட்சம் ஆகும். இவ்வாறு ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.