புதுதில்லி:
கொரோனா கால வறுமை காரணமாக,இந்திய கிராமப்புற மக்கள் அரைப்பட்டினியில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாக, ‘பர்தான்’ (PRADAN) என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஆய்வுஒன்றில் தெரியவந்துள்ளது.கொரோனா ஊரடங்கை கிராமப்புறங் கள் எவ்வாறு சமாளிக்கின்றன? என்பது குறித்து, ஏப்ரல் 28 முதல் மே 2 வரை 12 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 5162 வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, குஜராத், பீகார், அசாம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பல கிராமங்களுக்கு ஆய்வுக் குழுவினர் சென்றுள்ளனர்.
இதில், கிராமப்புற மக்களில் சதிபாதி குடும்பங்கள் அரைப்பட்டினியில் கிடப்பது - அதாவது வழக்கமான காலத்தைக் காட்டிலும் பாதியளவு உணவே உட்கொள்வது தெரியவந்துள்ளது.68 சதவிகித குடும்பங்கள் தங்கள் உணவில் பயன்படுத்தும் பொருட்களைக் குறைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 50 சதவிகித குடும்பங்கள் சாப்பிடும் எண்ணிக்கையை (வேளையை) குறைத்துவிட்டதாகவும், 24 சதவிகிதக் குடும்பங்கள் உணவு தானியங்களை கடன் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.22 சதவிகிதக் குடும்பங்கள் பணக்காரகுடும்பங்களிடமிருந்தும், 16 சதவிகித குடும்பங்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் வாங்கியுள்ளனர். 22 சதவிகிதம் பேர் கால்நடைகளை விற்று அன்றாட செலவுக்கான பணத்தை திரட்டியுள்ளனர். 14 சதவிகிதம் பேர் வீட்டுப் பொருட்களை அடமானம் வைத்து சமாளித்துள்ளனர்.
செலவை ஒத்திவைப்பது என்றால், அது எந்த செலவாக இருக்கும் என்று ஆய்வுக்குழு எழுப்பிய கேள்விக்கு, தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்லாமல் நிறுத்தி விடுவோம் என்று கூறி 29 சதவிகித குடும்பங்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.84 சதவிகித குடும்பங்கள், தங்களுக்கு ரேசன் மூலம் உணவுப் பொருட்கள் கிடைத்தது என்று கூறியது மட்டும்தான் இந்த ஆய்வின் ஒரே ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது.