புதுதில்லி,மார்ச் 8- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 ஞாயிறன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,உயர்விருதான நாரிசக்தி புரஸ்கார் விருதுகளை வழங்கினார். இந்தியாவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக போராடிய தன்னார்வ அமைப்புகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக நாரி சக்தி புரஸ்கார் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில் தில்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாரிசக்தி புரஷ்கார் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்திய விமானப்படையில் முதன்முதலாக போர் விமானங்களை இயக்கிய பெண் விமானிகளான மோஹனா ஜிட்டர்வால், அவானி சதுர்வேதி, பாவனா காந்த், பீகார் மாநிலத்தில் கிராமப்புற பெண்களி டையே காளான் வளர்ப்பு தொழிலை பிரபலப்படுத்தி அவர்களின் பொரு ளாதாரம் மேம்பாடு எய்திட வழிவகுத்த பினா தேவி மற்றும் தடகளப் பிரிவில் பல்வேறு சாதனைகளைப் படைத்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டியான மான்கவுர் உள்ளிட்டோருக்கு நாரிசக்தி புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.