திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்க செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
திருச்செங்கோட்டை சேர்ந்த தினேஷ் மற்றும் நாகஜோதி தம்பதியரின் பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் அனுராதாவிடம் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த அனுராதா, குழந்தைகளை விற்கும் புரோக்கரான கரூரை சேர்ந்த லோகாம்பாளுக்கு தகவல் சொல்லி வரவழைத்து குழந்தையின் பெற்றோரிடம் 3 லட்சம் ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி குழந்தையை விற்கும்படியும் லோகாம்பாள் வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த குழந்தையின் பெற்றோர் நாமக்கல் ஆட்சியர் உமா மற்றும் எஸ்.பியிடம் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு காவல் துறையினர் மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்திருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகச் சட்டவிரோதமாக சிறுநீரக தானம் செய்ய ஆள் பிடித்துக் கொடுத்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெண் குழந்தையை விற்பனை செய்ய மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் முயற்சி செய்ததும், சட்ட விரோத சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்ததையடுத்து காவல் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், மருத்துவர் அனுராதாவை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.