சீர்காழி, மே 26-சீர்காழி அருகே ரூ.68 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன அரிசி ஆலை குடோன் செயல்படுவது எப்போது என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் இங்கு ஊற வைத்து உலர்த்தி பின்னர் அரிசியாக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நெல் மூட்டைகளை வருடக்கணக்கில் கெட்டுப் போகாமலும், சேதம் ஏற்படாத வகையிலும் பாதுகாக்கும் வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.6 8கோடியில் நவீன தானியங்கி நெல் சேமிப்பு குடோன் கட்டப்பட்டது. 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை பயனற்று செயல்படாமல் உள்ளது. இதுவரை ஒரு மூட்டை நெல் கூட இங்கு சேமித்து வைக்கவில்லை. இந்த குடோன் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனால் இந்த குடோன் செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நவீன தானியங்கி குடோனில் சேமித்து வைக்கப்படும் நெல் மூட்டைகள் தானாகவே உலரும் வகையில் நவீன தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இது குறித்து எருக்கூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் பட்டுரோஜா கூறுகையில், ரூ.68 கோடியில் புதிதாக கட்டப்பட்ட எருக்கூர் நவீன அரிசி ஆலை குடோன் கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கியும் மக்களுக்கு எந்த பயனுமின்றி செயல்படாமல் உள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் உள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே மாதக் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டு, சேதம் மற்றும் எடை இழப்பு ஏற்பட்டு நஷ்டமானது. எனவே இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க எருக்கூர் நவீன நெல் சேமிப்பு கிடங்கை உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.