தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் இடமாற்றம் செய்த ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே உள்ள கீழடி கிராமத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழகத்தில் 3ஆம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரிகம் இருந்ததை வெளிக்கொணர்ந்தது. அதுமட்டுமின்றி சங்க இலக்கியம் துவங்கி தமிழ் இலக்கியங்களில் இருந்த தமிழர் வாழ்வில் தொன்மை மற்றும் இயற்கையோடு இயைந்த சமூக வாழ்வியல் குறித்த செய்திகளில் பொருண்மைச் சான்றுகளை வெளிக்கொணர்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒன்றிய அகழாய்வுத்துறை இந்த ஆய்வின் மீது மண் அள்ளிப் போடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்த அகழாய்வை முன்னின்று மேற்கொண்ட ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை நியாயமின்றி இடமாற்றம் செய்தது. அவர் இடத்திற்கு ஒன்றிய அகழாய்வுத்துறையால் நியமிக்கப்பட்டவர் கீழடியில் ஒன்றும் இல்லை என்று கூறி அகழாய்வை முடக்கினார். ஒன்றிய அகழாய்வுத் துறையும் இந்த ஆய்விலிருந்து விலகிக்கொண்டது.
இந்த நிலையில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகளை அறிக்கையாக அமர்நாத் ராமகிருஷ்ணா ஒன்றிய தொல்லியல் துறைக்கு அளித்திருந்தார். இந்த அறிக்கையை வெளியிடாது கிடப்பில் போட்டது மட்டுமின்றி தற்போது அந்த ஆய்வறிக்கையைத் திருப்பி அனுப்பி திருத்தி எழுது மாறு ஒன்றிய அகழாய்வுத்துறை கூறியுள்ளது. ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து ஒன்றிய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
பண்டைய கால ஆய்வு(Antiquity) மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா இருந்த நிலையில், இனி நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் இடமாற்றம் செய்த ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.