பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்து சேவை துவக்கம்
பெரம்பலூர். ஜுன் 17- புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024-ன் கீழ், பெரம்பலூர் மாவட்டத்திற்கான சிற்றுந்து சேவைகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பாலக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து சிற்றுந்தில் சிறிது தூரம் பயணம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு முதன்மை செயலாளர்/போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 31 சிற்றுந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் முதல் நத்தக்காடு, ஆய்குடி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முதல் பெரியவடகரை, செட்டிக்குளம், விசுவகுடி, அம்மாபாளையம் முதல் துறைமங்கலம் மின்சாரத்துறை அலுவலகம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் முதல் தனலட்சமி சீனிவாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட, ஏற்கனவே சிற்றுந்துகள் இயக்கப்பட்ட 30 வழித்தடங்களிலும், செங்குணம் முதல் செஞ்சேரி வரை புதிய வழித்தடத்திலும் என மொத்தம் 31 சிற்றுந்துகள் செவ்வாயக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை ஆணையர் ஜெயக்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.