tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜுன் 20 - மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

மயிலாடுதுறை, ஜுன் 17-  மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் இணைந்து, மயிலாடுதுறையிலுள்ள யூனியன் கிளப்பில் ஜுன் 20 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை குறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப் பணியிடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொள்ளலாம்  இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை  https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

வெட்டாற்றை தூர்வார கோரிக்கை

பாபநாசம், ஜுன் 17-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கருகாவூரில் உள்ள வெட்டாற்றை, தூர்வாரி 15 ஆண்டுகளாகிறது. இதில் நாணல்கள் மண்டிக்கிடப்பதால் நீரின் போக்கைத் தடுக்கின்றன.  வெட்டாறிலிருந்து ராஜா வாய்க்கால், அம்மன் கோயில் வாய்க்கால் பிரிகிறது. ராஜா வாய்க்காலால் ஏறக்குறைய 500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதேபோன்று, அம்மன் கோவில் வாய்க்காலால் ஏறக் குறைய 650 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த இரண்டு வாய்க்கால்களும் தூர்வாரப் படவில்லை. அம்மன்கோவில் வாய்க்காலிலிருந்து 5 கிளை வாய்க்கால்கள் பிரிகின்றன. கிளை வாய்க்கால்களை நூறு நாள் வேலையில் தூர் வாரியதாக பலகை வைத்துள்ளனர். ஆனால், முழுமையாக தூர் வாரியதாகத் தெரியவில்லை எனக் கூறும் அப்பகுதி விவசாயிகள், தூர்வாரியதன் பலன் விவசாயிக்கு கிடைக்கவில்லை. ஆனால், யாருக்கு சென்றது என்பது உரியவர்களுக்கு தெரியும் என்கின்றனர். தமிழக முதல்வர் ரோடு ஷோ நடத்துவதை தவிர்த்து விட்டு, உண்மையான விவசாயிகளை, கட்சிக் காரர்களை, பொதுமக்களை சந்தித்தால் அவர்களது அதிருப்தி தெரிய வரும். பத்து மாதத்தில் தேர்தலை சந்திக்க உள்ள தமிழகத்தின் உண்மை நிலவரம் தெரியவரும் என்கின்றனர்.

திருநங்கையர்  சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜுன் 17-  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு, ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக, சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜுன் 24 அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவை பெற்றுக் கொள்ளலாம். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.

தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி  அரசு பள்ளி மாணவிக்கு  விமான பயணம் பரிசு

அரியலூர், ஜுன் 17-  அரியலூர் தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி தலைமை ஆசிரியருடன் விமானத்தில் பயணம் செய்தார்.  ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஒன்றிய அரசு தேசிய திறனறிவு தேர்வை நாடு முழுவதும் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்நிலையில், இவ்வாண்டுக்கான தேசிய திறனறிவுத் தேர்வை ஜெயங்கொண்டம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், கடந்த பிப்ரவரி 22 ம் தேதி அன்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.  அதில் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 25 பேர் தேசிய திறனறிவுத் தேர்வு எழுதியதில் மாணவி ஷர்மிளா தேர்ச்சி பெற்றார். தலைமை ஆசிரியர் அமுதா தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்றால் விமானத்தில் அழைத்துச் செல்வதாக மாணவர்களை ஊக்கப்படுத்தி இருந்தார். அதன்படி, வெற்றி பெற்ற மாணவி ஷர்மிளாவை கடந்த ஜுன் 14 ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்திலும், சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்தே பாரத் ரயிலிலும் அழைத்துச் சென்று மாணவியை மகிழ்வித்தார்.

குப்பைகளால் துர்நாற்றம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாபநாசம், ஜுன் 17-  கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில், பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் மெயின் சாலையையொட்டிச் செல்கிறது அரையபுரம் வாய்க்கால். பாசன வாய்க்காலான அரையபுரம் வாய்க்காலின் தலைப்பு குடமுருட்டியாகும்.  இந்த வாய்க்கால் அருகில் குடியிருப்புகள், தனியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, நிதி நிறுவனம், சலூன், மளிகை, மெஸ், மெடிக்கல், ஆட்டோ பார்ட்ஸ், ஸ்டுடியோ உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. மெயின் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அரையபுரம் வாய்க்காலில் மெயின் சாலையையொட்டி, நெடுக கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர் நாற்றம் வீசுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட நேரிடுகிறது. குப்பை கழிவுகளால் பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயமுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.