சீமான் அடாவடிப் பேச்சு பெ. சண்முகம் கடும் கண்டனம்
சென்னை, ஜூலை 16- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, ‘கிணற்றுக்குள் இருக்கும் தவளை’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையாக சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ரிதன்யா தற்கொலைச் சம்பவத்தில் அரசியல் கட்சிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாதர் சங்கங்கள், பெண்ணியவாதிகள் என யாரும் பேசவில்லை. எல்லோரும் எங்கே சென்றீர்கள்? கொக்கைன், கஞ்சா, டாஸ்மாக் சரக்கைக் குடித்துவிட்டு படுத்து விட்டீர்களா?” என்று வழக்கம் போல வாய்ச் சவடால் அடித்திருந்தார். இதுதொடர்பாக, பெ. சண்முகம் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கிணற்றுக்குள் இருக்கும் தவளை, உலகம் இவ்வளவுதான் என்று கருதிக்கொள்ளுமாம். அதுபோல் சீமான் எனும் தவளை தன்னைத் தவிர தமிழகத்தில் யாருமே போராடுவதில்லை என்று பிதற்றிக் கொண்டு திரிகிறது. ரிதன்யாவுக்காக மாதர் சங்கம் எழுப்பிய குரல் கிணற்றுக்குள் இருந்த சீமான் தவளைக்கு கேட்காமல் போயிருக்கலாம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.