அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு ஊதியம் வழங்குவதில் அலட்சியம்
தமிழ்நாட்டில் உள்ள 162 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஜனவரி 2023 முதல் ஊதிய மானியம் சரிவர ஒதுக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வை.கோபிநாத் குற்றம்சாட்டியுள்ளார். “ஒவ்வொரு மாதமும் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஊதியப் பட்டியல்களை காசாக்குவதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஊதியப் பிரிவு அலுவலர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது மார்ச் 2025 மாத ஊதியப் பட்டியலை 24.3.2025-க்குள் கருவூலத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஊதிய மானியம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்பதோடு, பணியாளர்கள் காசாக்க கருவூலத்திற்கு செல்ல 400 கிலோமீட்டர் வரை பயணிக்க நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.