பெண்களை அவமதித்து பேசிய சி.வி.சண்முகத்திற்கு மாதர் சங்கம் கடும் கண்டனம்
சென்னை, அக்.13 - ‘சட்டமன்றத் தேர்தலில் ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்’ என பெண்களை அவமதித்து பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் “தேர்தல் நெருங்குது... அறிவிப்பு வரும்... ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்!” எனப் பேசினார். இது பெண் களை இழிவுபடுத்தி அவர்களை “வாக்கு வாங்கும் பொருட்களாக” சித்தரிக்கும் மிகக் கடுமையான பெண்கள் விரோத கருத்தாகும். இது ஒரு நையாண்டி அல்ல. ஆணாதிக்க சமூக மனப்பான்மையின் உச்சபட்ச வெளிப்பாடு. பெண்களை சக மனுசியாக பார்க்காமல், ஒரு இலவச பொருளாக, ஆண்களின் தேவைக்காக, அரசியல் பரிசாக வழங்கப்படும் பொருளாக பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இப்படிப்பட்ட கருத்துகள், சமூகத்தின் அடிப்படையான பெண்களின் மரியாதை யையும் அரசியல் நெறிகளையும் மீறுவதாகும். இத்தகைய பேச்சு, பெண்களின் வாழ்க்கையை அரசியல் நகைச்சுவையாக மாற்றுகிறது. வாக்கு வங்கிகளுக்காக பெண்களின் மரியாதை ஒரு பரிமாற்றப் பொருளாகக் காட்டப்படுகிறது. இதுபோன்ற கருத்துகள் சமூகத்தில் ஆணா திக்கத்தை மட்டும் அல்ல, பெண் மீது நடக்கும் வன்முறைகளையும் நியாயப்படுத்துவதற்கு அடிப்ப டையாக மாறுகின்றன. ஒரு பெண்ணை ‘இலவச பரிசு’ போலச் சித்தரிக்கும் மொழி, பாலியல் வன்கொ டுமை, திருமண வன்முறை போன்றவற்றுக்குப் பின்னால் நிற்கும் மனப்போக்கே ஆகும். மக்கள் பிரதிநிதி — பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய கருத்தை வெளிப்படுத்துவது, அரசியல் நெறிமீறல், பொறுப்பின்மையின் வெளிப்பாடு, பெண் களின் மரியாதையைப் பொது மேடையில் கேலி செய்வதாகும். இது பெண்களின் வாக்குரிமையை யும், அரசியலில் அவர்களின் பங்களிப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது. பெண்கள் இன்று கல்வியில், அரசியலில், பல்வேறு தொழிலில் முன்னேறியுள்ளனர். அவர்களின் உழைப்பும், போராட்டமும் இந்த சமூகத்தை முன் னேற்றுகிறது. அத்தகைய சமூகத்தில் ஒரு பெண் ணின் மரியாதையை கேலி செய்வது, பெண்களின் சாதனையை அவமதிப்பதாகும். இத்தகைய பேச்சை வெளிப்படுத்திய சி.வி. சண்முகம் மீது அதிமுக, கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பொது மேடைகளில் அவமரியாதையாக பேசும் அரசியல் கட்சித் தலை வர்கள் மீது சட்டரீதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை அவமதிக்கும் வகையிலான அரசியல் பேச்சுக்களுக்கு எதிராக, தேர்தல் ஆணை யம் தனிப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.