ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கி முகேஷ் அம்பானியின் வீட்டுத் திருமணத்திற்கு மோடி அரசின் மெகா மொய் வழங்கியுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
அம்பானி வீட்டுத் திருமணத்திற்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியுள்ளது மோடி அரசு. அதன்படி, பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமானங்களை ஜாம்நகர் விமான நிலையத்துக்கு வர ஒன்றிய பாஜக அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக 6 சிறிய விமானங்களை மட்டும் இறங்கி ஏறுகிற இந்த இடத்தில் 140 விமானங்கள் வந்திறங்கக்கூடிய வகையில், முன்னதாகவே திட்டமிட்டு விமான நிலையத்தை விரிவாக்கப்படுத்தியுள்ளது மோடி அரசு. மேலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கி முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்திற்கு மோடி அரசின் மெகா மொய் வழங்கியுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது:
"முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து. 6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.
ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.