மக்களுக்கு பாதகமான உத்தரவை ஒரே நாளில் அமல்படுத்திய வங்கிகள் நகைக்கடன் பிரச்சனையில் 9 மாத அவகாசம் கேட்பது அபத்தம்!
மதுரை, நவ. 13 - தங்க நகைக் கடன் சம்பந்தமாக 2025 ஜூன் 6 அன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட முழுமை யான வழிகாட்டு நெறிமுறை களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு பாதகமான முடிவை ஒரே நாளில் நடைமுறைப்படுத்திய வங்கிகள், அந்த முடிவை கைவிடவேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு மட்டும் 9 மாத கால அவகாசம் கேட்பது அபத்தம் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், அவர் மேலும் கூறியிருப்பதாவது: நகைக்கடன் புதுப்பிக்கும் வசதி நிறுத்திய வங்கிகள் தங்க நகைக் கடன் பெறுவதில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாமானிய மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். 2024 செப்டம்பர் 30 அன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறை களை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் “நகைக் கடனை புதுப்பிக்கும் வசதியை” நிறுத்தி விட்டன. “அனைத்து கடனாளிகளும் நகைக் கடனை முழுமையாக செலுத்திய பின்பு தான், மறு கடன் கொடுக்கப்படும்” என்று முடி வெடுத்து விட்டன. இதன் காரணமாக அவசரத் தேவைக்கு நகை கடன் வாங்கும் எளிய மக்கள் கடும் துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். முழு கடனையும் அடைக்க வசதி இல்லாத பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களின் நகைகள் மூழ்கி விட்டன. இதனை ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கும், ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றதற்கு பிறகும் அவை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குப்புறத் தள்ளி குழியையும் பறித்த குதிரையின் கதை... இந்தாண்டு 2025 ஏப்ரல் 9 அன்று தங்க நகைக் கடன் சம்பந்தமாக ரிசர்வ் வங்கியின் முழுமையான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இவை இந்த பிரச்சனையை தீர்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் “குதிரை குப்புற தள்ளியதோடு நில்லாமல் குழியும் பறித்த கதையாக” அமைந்தன. நகைக் கடனை புதுப்பிப்பது பற்றி, இந்த வழிகாட்டும் நெறிமுறையில் எதுவும் இல்லை. மாறாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த நகைக் கடனின் தொகை குறைக்கப்பட்டதுடன், l சொந்த நகையா என்பதற்கு ஆதாரம், l நகைக் கடனை எதற்காக செலவிட போகிறார்கள் என்பதற்கான ஆதாரம், l நகை கடனை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளதா என்பதை வங்கிகள் சரிபார்க்கும்.. l வங்கிகள் மூலமாக விற்கப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டும்தான் கடன் கொடுக்க முடியும்.. l நகைக் கடனை முழுமையாக அடைத்த பிறகும் நகைகளை திருப்பிக் கொடுக்க 7 நாட்கள் வரை ஆகும்... - என்பன உள்ளிட்ட பல எதிர்மறையான நிபந்தனைகள் இடம்பெற்றன. எனது தலையீட்டால் புதிய நெறிமுறைகளை வகுத்த ரிசர்வ் வங்கி இவற்றையெல்லாம் கைவிடுமாறு, ஒன்றிய நிதியமைச்சரை இந்தாண்டு மே 25 அன்று நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தேன். ரிசர்வ் வங்கிக்கும் இது சம்பந்தமாக கடிதம் எழுதினேன். நிதியமைச்சகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு எதிர்மறையான நிபந்தனைகளை கைவிடுமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியது. அதன் காரணமாக, 2025 ஜூன் 6 அன்று நகைக் கடன் சம்பந்தமாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட முழுமையான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அனைத்து எதிர்மறையான அம்சங்களும் கைவிடப்பட்டன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். கூடுத லாக நகை மதிப்பு உயரும் பட்சத்தில் டாப் அப் கடன் வழங்கும் திட்டமும் இந்த புதிய வழிகாட்டும் நெறிமுறைகளில் புதிதாக இடம் பெற்றது. சாமானிய மக்களுக்கு சாதகமான இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மிக விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், அதிகபட்ச மாக 2026 ஏப்ரல் முதல் தேதிக்கு முன்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டியது. உடனடியாக அமல்படுத்த வங்கிகள் தயாரில்லை..? “நகைக் கடனை புதுப்பிக்கும் நடைமுறை யை கைவிட வேண்டும்” என்ற ஒரு பாதகமான வழிகாட்டுதல் நெறிமுறையை உடனடியாக அமலாக்கிய வங்கிகள், சாமானிய மக்களுக்கு சாதகமான வழிகாட்டல் கொள்கைகளை உடனடியாக அமல்படுத்த தயாராக இல்லை. எனவே, 2025 ஆகஸ்ட் 8 அன்று நிதி யமைச்சகத்திற்கு இது சம்பந்தமாக மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். அதில் “ரிசர்வ் வங்கி யின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக 2025 செப்டம்பர் முதல் தேதிக்கு முன்னர் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று ஒரு கோரிக்கையை இந்த கடிதத்தில் எழுப்பினேன். ஏமாற்றம் அளித்த நிதியமைச்சரின் பதில் ஆனால் என்னுடைய கடிதத்திற்கு பதில் கடிதமாக நிதி அமைச்சரிடம் இருந்து சென்ற அக்டோபர் 27 அன்று பெறப்பட்ட கடிதம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த புதிய நெறிமுறைகளை அமலாக்குவதற்கான கடைசி தேதியை 2026 ஏப்ரல் ஒன்றிலிருந்து முன்கூட்டியே மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றப்பட்டால், அது “அமலாக்க நடைமுறையில் பல சவால்களை உருவாக்கும் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும்” ரிசர்வ் வங்கி கூறுவதாக இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணக்காரர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் வங்கிகள்? நகைக் கடனை புதுப்பிக்கும் வசதியை ஒரே நாளில் நிறுத்த முடிந்த வங்கிகளால், அதைத் தொடர்வதற்கு எதற்கு 9 மாதங்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. அரசு வங்கிகள் சாமானிய மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு பதிலாக தனியார் வங்கிகளைப் போல பணக்காரர்களுக்கு சேவை செய்வதற்கான முன்னுரிமையை அளிக்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. எனவே, உடனடியாக அனைத்து அரசு வங்கிகளும், கிராம வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்தி சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
