tamilnadu

img

பேராவூரணி பகுதியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

பேராவூரணி பகுதியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், வலப்பிரமன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து பள்ளியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் குத்து விளக்கேற்றி வைத்தார். அதேபோல், பேராவூரணி சேதுசாலையில் கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை, முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் குத்து விளக்கேற்றி வைத்தார்.  சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பையில் முன்னோடி விவசாயி கோவிந்தன் தென்னந்தோப்பில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பயிர் பாதுகாப்பு மையம் கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய, தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமை தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நா.முத்துக்குமரன், கை. குமணன் ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்.