திருப்பரங்குன்றம் பிரச்சனைக்குள் ஒன்றிய அரசை நுழைப்பது வரம்பு மீறிய செயல்- சதித்திட்டம்!
சென்னை, டிச. 10 - திருப்பரங்குன்றம் பிரச்சனைக்குள் ஒன்றிய அரசை நுழைக்கும் வகையி லான நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு, வரம்பு மீறிய செயல்; மற்றும் திட்டமிட்ட சதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நீதிமன்ற விதிகளுக்குப் புறம்பான உத்தரவுகள் திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்-பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைச் சீர் குலைக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஒரு நபர் தொடுத்த வழக்கை அடிப்படையாக வைத்து- அவசர அவசரமாக விசாரித்தது, நடை முறை சாத்தியமற்ற உத்தரவுகளை பிறப்பித்தது, மாநில அதிகாரிகளை மிரட்டுவது, ஒன்றிய - மாநில ஆயுத படைகளுக்கிடையே மோதலை தூண்டுவது என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ச்சியாக நீதிமன்ற விதிகளுக்குப் புறம்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவர் பிறப்பிக்கும் உத்தரவுகள் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக வும், மக்களிடையே மோதலை தூண்டுவதாகவும் உள்ளது. தவறான கணிப்புகளின் அடிப்படையில் இந்த தீர்ப்புகள் அமைந்து விட்டன என்று கருத வாய்ப்பில்லாத அளவிற்கு கலவர முயற்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு உதவும் வகையிலேயே அவரது உத்தரவுகள் அமைந்துள்ளன. மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் ஊடுருவ முயற்சி இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், செவ்வாயன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்த வழக்கை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆகி யோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஒன்றிய அரசின் உள்துறை செயலாளரையும் இவ்வழக்கில் சேர்த்து உத்தரவிட்டிருக்கிறார். இது முற்றிலும் அவசியமற்றது என்பதுடன், இதன்மூலம் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் திட்டமிட்டு ஒன்றிய அரசை தலையிட வைக்கும் சதியை மறுப்பதற்கில்லை. இப்பிரச்சனையில் ஒன்றிய அர சிற்கு சம்பந்தமில்லாத போதும், மனு தாரர் அப்படிப்பட்ட கோரிக்கையை முன் வைக்காத நிலையிலும் நீதிபதியே ஒன்றிய உள்துறை செயலாளரை வழக் கில் இணைத்திருப்பது இப்பிரச்சனை யை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்குவதற்கே உதவும். உள்நோக்கத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்தும் தீர்ப்புக்கள் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் தர்ஹா நில உரிமை குறித்த தாவா எதுவும் இல்லாத போது, வேண்டு மென்றே அதையும் இணைத்திருக் கிறார். அவருடைய நீதிமன்றத் தீர்ப்புகள் நீதிபதிகள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளுக்கு உட்பட்டோ, அரசிய லமைப்புச் சாசன சட்டத்தின்படியோ, அல்லது வழக்கின் தன்மையின் அடிப் படையிலோ அமையவில்லை. மாறாக, உள்நோக்கத்துடன் அவர் செயல்படு வதாகவே கருத இடமளிக்கிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று 107 எம்.பி.க்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ள நிலையிலும் தொடர்ந்து இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்கி வருகிறார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் இந்தப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ்நாட்டு மக்கள், இந்தப் போக்கிற்கு எதிராக தங்கள் குரலை வலுவாக எழுப்பு வதுடன், ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் சதிச் செயல்களை ஒன்றுபட்டு முறியடிக்க முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்நாடு அரசு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.