tamilnadu

img

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை கலங்கவைத்த தோனியின் ஓய்வு... 

சென்னை 
கிரிக்கெட் உலகில் ஒருநாள் உலகக்கோப்பை, டி-20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அழைக்கப்படும் மினி உலகக்கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிட மகுடம் என இந்த 4 பெருமைகளையும் ஒரே கேப்டனாக  கைப்பற்றிய முதல் இந்தியக் கேப்டன் மஹேந்திர சிங் தோனி மட்டும் தான். 

இத்தகைய சிறப்புடைய தோனி சுதந்திர தினத்தன்று மாலை நேரம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்விற்கு சுதந்திரம் வழங்கினார். இவரது ஓய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த தோனியின் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரருமான சுரேஷ் ரெய்னாவும் அன்றைய தினமே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

தோனி தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்ததால் இந்திய கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியில் மூழ்கியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தான். காரணம் தோனி தமிழக ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 7-க்கும் மேற்பட்ட சீசனில் விளையாடியுள்ளார். இதனால் அவரை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் "கிரிக்கெட்டின் தல" என அழைக்கின்றனர். தோனி கிரிக்கெட் நிகழ்வுகளில் மட்டுமின்றி பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் தமிழக அணியான சென்னையின் எப்சி அணியை கூட தோனி விலைக்கு வாங்கி கால்பந்திலும் தமிழக உணர்வுகளுடன் இணைந்தார். இதனால் கிரிக்கெட் துறையில் சம்பந்தமில்லாத அதாவது விளையாட்டு உறவை அறியாத தமிழக மக்கள் கூட தோனியை தெரிந்து வைத்துள்ளனர். 

தோனிக்கு பிரியாவிடை அளிப்பதில் மற்ற இந்திய மாநிலங்களை விட ஏன் தோனி பிறந்த ஜார்கண்ட் மாநில மக்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள், நோட்டிசுகள், வலைதள மீம்ஸ்கள் போன்றவைகள் மூலம் சோகமான உணர்வுகளை வெளிப்படுத்தினர். சிலர் கண்ணீருடன் வீடியோ பிரியாவிடையை செய்தனர். 

எனினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் சற்று ஆறுதலுடன் உள்ளனர்.