tamilnadu

img

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பு

புதுதில்லி, ஆக.5-

இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினமாகும். ஆளும் பாஜக அரசாங்கத்தால், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மேலும் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று (திங்கள்கிழமை) நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த, அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் இரண்டாகப் பிரிப்பதற்கான ஒரு சட்டமுன்வடிவையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இதன்படி லடாக்கில் அமைந்திடும் யூனியன் பிரதேசத்திற்கு தற்போது சண்டீகார் மாநிலம் அமைக்கப்பட்டிருப்பதுபோல் தனியே சட்டமன்றம் எதுவும் கிடையாது.  ஆனால், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தில்லி மற்றும் புதுச்சேரியில் இருப்பது போன்று சட்டமன்றம் இருந்திடும்.

அமித் ஷா இவற்றை அறிமுகப்படுத்தியபோது, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்திய ஜனநாயகத்தின் கறுப்புதினம்

இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை இந்திய அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது என்றும் பதிவு செய்துள்ளார். “அரசின் இந்த முடிவு இத்துணைக்கண்டத்தில் பெருங்கேட்டினை ஏற்படுத்திடும். அரசின் நோக்கங்கள் மிகவும் தெளிவானவை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாழும் மக்களை அச்சுறுத்திட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமாகும். இந்தியா, காஷ்மீருக்கு அளித்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது,” என்று அவர் மேலும் தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

(ந.நி.)

.