tamilnadu

img

12 மணி நேர வேலை சட்ட மசோதா - கோவையில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கோவையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று 2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி தமிழ்நாட்டு அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியது. 
இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி, மே 12-ஆம் தேதி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இன்று மாலை 3 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிநாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.