tamilnadu

img

வாக்காளர்களுக்கு நன்றி - வளர்ச்சி பணிகளில் அக்கறை செலுத்துவோம்

கோவை, மே 23-கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக, கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை ஒரு லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு எங்கள் அணியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம்வேண்டும் என்ற கருத்தோடு, தமிழக மக்கள் மதிப்பளித்து வாக்கினை அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின்மதச்சார்புடைய அரசுக்கு எதிராகவும், ஜி.எஸ்.டி மற்றும் மதவாத அரசியலுக்குஎதிராகவும் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதை பார்க்கிறோம்.தமிழக மக்களின் அனைத்து விருப்பங்களையும், உத்தரவுகளையும் முழுமையாக நிறைவேற்ற முயற்சிப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, கோவை மாநகரின் சிறுதொழில்களை பாதுகாக்க ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற முதல் முயற்சியை உறுதியோடு மேற்கொள்வோம். தொழிலை பாதுகாப்பதும், தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பையும் பாதுகாப்போம் என்பதை முதல் பணியாக எடுத்துக் கொள்வோம். எதிர்காலத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்துவோம். நொய்யல் ஆறு, கவுசிகா நதி உள்ளிட்ட மாவட்டத்தின் நீராதாரங்களை பாதுகாக்கத் தேவையான முயற்சியை அனைத்து அமைப்புகளோடும் இணைந்து மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.