பென்னாகரம், ஜூன் 15- பென்னாகரம் அருகே கோடுப்பட்டி வனப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி படு காயமடைந்தார். தருமபுரி மாவட்டத்துக்குட்பட்ட பென்னாகரம் அருகேயுள்ள தாசம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவ சாயி கன்னியப்பன் (50). தாசம்பட்டி மாரியம்மன் கோயி லில் அண்மையில் நடைபெற்ற திருவிழா வான வேடிக் கையின்போது நிகழ்ந்த வெடிச் சத்தத்தில் கன்னியப்பனின் மாடுகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றனவாம். இந்நிலையில், பாலக்கோடு வனச்சரகம், மொரப்பூர் பீட் தாசம்பட்டி வனப் பகுதிக்குள் மருக்காரம்பட்டி கிணறு பகுதியில் மாடுகளைத் தேடி சென்றபோது, காட்டு யானை தாக்கியதில் கன்னியப்பன் படுகாயமடைந்தார். மேலும், காட்டு யானை பிளிறிய சத்தம் கேட்ட ஆடு மேய்ப்பவர்கள் அங்கு வந்து, காயமடைந்த கன்னியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, மாவட்ட வனஅலுவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில், பாலக்கோடு வனச் சரக அலுவலர் செல்வம் தலைமையிலான வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.